அதிமுகவில் வழக்கறிஞர்கள் அணியை பலப்படுத்த பலே திட்டம்... எடப்பாடி பழனிசாமி வகுக்கும் புது வியூகம்..!
சென்னை: அதிமுகவில் வழக்கறிஞர்கள் அணியை பலப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறார் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி.
திமுக அரசு வீசும் வழக்கு அஸ்திரங்களை திறமையாக கையாளக்கூடிய நபர்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்.
தற்போதைய சூழலில் அதிமுகவின் வழக்கறிஞர்கள் அணி முகமாக இருப்பது மனோஜ்பாண்டியனும், பாபு முருகவேலும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
Exclusive: OPS பொறுமை காக்கச் சொன்னார்.. அதிமுக எனக்கு செட் ஆகல.. விலகிட்டேன் -Aspire சுவாமிநாதன்..!
10 ஆண்டுகள்
கடந்த 10 ஆண்டுகளாக திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் ஆளுங்கட்சிக்கு எதிராக அவ்வப்போது ஷாக் கொடுத்துக் கொடுத்துக்கொண்டே இருந்தது. அதற்கு காரணம் திமுகவில் வலிமையாக உள்ள வழக்கறிஞர்கள் அணி தான். சண்முகசுந்தரம், ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோவன், ஹசன் முகமது ஜின்னா, கிரிராஜன், ஐ.பரந்தாமன், என ஸ்டாலினின் கண் அசைவுக்கேற்ப பம்பரமாக சுழன்று பணியாற்றக்கூடியவர்கள் திமுக வழக்கறிஞர்கள் அணியில் ஏராளம்.
வழக்கறிஞர்கள் அணி
ஆனால் அதிமுகவில் திமுகவுக்கு இணையாக வலிமை வாய்ந்த வழக்கறிஞர்கள் அணி இல்லை என்பது அக்கட்சிக்கு மைனஸாக கருதப்படுகிறது. நவநீதகிருஷ்ணன், பாபு முருகவேல், மனோஜ்பாண்டியன், என ஒரு சிலர் மட்டுமே கட்சிக்காக சற்று சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடியவர்கள். இதனிடையே தற்போதைய சூழலில் அதிமுகவில் வழக்கறிஞர்கள் அணி பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என விரும்புகிறார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
திறமையான
திமுக அரசு தொடரும் வழக்குகளை எதிர்கொள்ளவும், திமுக அரசின் செயல்பாடுகளை, ஒப்பந்த ஒதுக்கீடுகளை பூதக்கண்ணாடி கொண்டு கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளவும் திறமையான வழக்கறிஞர்கள் தேவை என எண்ணுகிறார் எடப்பாடி பழனிசாமி.
விரைவில்
இதனிடையே சசிகலா ஆடியோ, எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு, சசிகலாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் என இன்னும் ஒரு சில விவகாரங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியதால் வழக்கறிஞர்கள் அணியை பலப்படுத்தும் முயற்சிக்கு சிறு இடைவெளி விட்டுள்ளார். விரைவில் இந்தப் பணியை தொடங்குவதோடு உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னெடுப்புகளிலும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.