ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளர்- ஓபிஎஸ் பொதுச்செயலாளர்? அதிமுகவின் நாளைய க்ளைமாக்ஸ் இதுதானாம்!
சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி; பொதுச்செயலாளராக ஓ. பன்னீர்செல்வம் என்கிற அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடைந்துவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளாக உட்கட்சி பூசல் போன்ற சலசலப்புகள் இல்லாமல் இருந்தது. ஆனால் திடீரென முதல்வர் வேட்பாளர் நானே என ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கப் போய் அக்கப்போர் ஆரம்பித்தது.
அதிமுகவில் ஓயாத அலைகள்... இடைவிடாமல் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்றும் ஆலோசனை...பதைபதைப்பில் தொண்டர்கள்
செயற்குழுவில் வெடித்தது
3 ஆண்டுகாலத்துக்கும் மேலாக ஆட்சியை பிரச்சனை இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் துணை முதல்வரின் கலகக் குரலை முதல்வர் ஓபிஎஸ் தரப்பால் ஏற்க முடியவில்லை. அதிமுகவின் செயற்குழுவிலும் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
அறிவிப்புக்கு அக். 7 கெடு
ஓபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரை எதையும் விட்டுக் கொடுக்க முடியாது என்கிற நிலையில் இருந்தது. இதனால் அதிமுகவில் விரிசல் அதிகமானது. இருதரப்பும் மாறி மாறி ஆலோசனைகளை நடத்தியது. அத்துடன் முதல்வர் வேட்பாளர் குறித்து அக்டோபர் 7-ந் தேதி அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுகவில் பரபர ஆலோசனை
இதனால் அதிமுகவில் பதற்றம் நீடித்து வந்தது. இருதரப்பும் ஆதரவாளர்களுடன் இடைவிடாமல் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் இருதரப்பும் ஒருவழியாக ஏற்கனவே பேசப்பட்ட ஒரு ஒப்பந்தத்துக்கு இணங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அதிமுக வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈபிஎஸ், ஓபிஎஸ் ஏற்பு
இதன்படி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி; அதிமுகவின் பொதுச்செயலாளராக ஒருமனதாக ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதன்மூலமாக ஆட்சி ஒருவரிடமும் கட்சி ஒருவரிடமும் இருக்கும். இது அதிமுகவின் எதிர்காலத்துக்கும் சுமூகமாக இருக்கும் என்ற அடிப்படையில் இருதரப்பும் இதை இணக்கமாக ஏற்றுக் கொண்டிருக்கிறதாம். இதனால் அதிமுக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.