வண்டியை விருதுநகருக்கு விடுங்க... ஏர்வாடி தர்ஹா பயணதிட்டத்தை ரத்து செய்த முதல்வர்
சென்னை: ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவை முடித்துவிட்டு மதுரை திரும்பும் வழியில் முதல்வர் ஏர்வாடி தர்ஹாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பயணதிட்டம் கடைசியில் ரத்து செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தானில் கடந்த 1-ம் தேதி அன்று புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த முதல்வர் அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றார். அவருக்கு ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும், எடப்பாடியாரின் தீவிர விசுவாசியுமான முனியசாமி உற்சாக வரவேற்பு அளித்து அசத்தினார்.
ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக புறப்பட்ட முதல்வரை, உள்ளூர் கட்சிக்காரர்கள் போகும் வழியில் உள்ள ஏர்வாடி தர்ஹாவுக்கு செல்லுமாறு கேட்டிருக்கின்றனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், முதல்வரின் தர்ஹா விசிட் ஓரளவு பலனளிக்கும் என யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதல்வர் தரப்பில் அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.
ஏற்கனவே சி ஏ ஏ விவகாரத்தில் ஆட்சியையும், கட்சியையும், இஸ்லாமியர்கள் ரவுண்டு கட்டி வரும் நிலையில், வாலன்ட்ரியாக தர்ஹாவுக்கு சென்று வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லையாம் முதல்வர். இதனால் ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்த கையோடு வண்டியை விருதுநகருக்கு விடச் சொல்லியுள்ளார். திருச்சுழி வழியாக விருதுநகர் சென்ற முதல்வர் அங்கும் புதிய மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு மதுரை சென்றடைந்தார்.
அங்கு உற்சாக மூடில் இருந்த அவர் கமல்ஹாசன் பற்றி ஒரு பிடி பிடித்தார். பின்னர் மதுரை மாவட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.