ஈபிஎஸ் முறையீடு ஏற்பு.. ஜன.30ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை.. முக்கிய உத்தரவு உண்டா? ஏன் முக்கியம்
அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில் ஜனவரி 30ல் விசாரணைக்கு ஏற்பு.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெறும் வகையில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முறையீடு செய்தது. இது உச்சநீதிமன்றத்தின் முறையீட்டு வழக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 30ம் தேதி (திங்கட்கிழமை) விசாரிக்கப்பட உள்ளது. இது தற்போது அதிமுக விவகாரத்தில் மிகவும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட தொடங்கினர். மேலும் பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு டெபாசிட் கிடைக்காது.. பின்வாங்குறது ஏன்னு புரியுதா: அமைச்சர் மனோ தங்கராஜ்
இதுதவிர அந்த பொதுக்குழு சார்பில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். ஜூலை 11ல் சென்னை வானகரத்தில் நடந்த இந்த பொதுக்குழுவின் முடிவை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.
இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்
சென்னை உயர்நீதிமன்றத்தின் தனிநீதிபதியின் உத்தரவு ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவாக அமைந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் அமர்வு விசாரித்து தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்தது. அதன்படி தற்போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விசாரித்தது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு தொடர்ந்து விசாரித்தது. ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களை முன்வைத்தன. இருதரப்பு வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் முடிவடைந்தன. ஜனவரி 11ல் வழக்கின் தீர்ப்பு என்பது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல்
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னம் என்பது முடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திடீரென்று நாடி முறையீடு ஒன்றை செய்தது.
எடப்பாடி பழனிச்சாமி முறையீடு
அதாவது, ‛‛அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரோடு கிழக்கு சட்சபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும், வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போடுவதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. அவர் தான் இடைக்கால பொது செயலாளர் என்பதால் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்குத்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும். எங்கள் தரப்பு வேட்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என முறையீடு செய்யப்பட்டது.
ஜனவரி 30ல் விசாரணை
இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்பதாக நீதிமன்றம் தெரிவித்த நிலையில் ஜனவரி 30ல் முறையிட நீதிமன்றம் கூறியது. மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இது முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் முறையீடு என்பது தற்போது உச்சநீதிமன்றத்தின் முறையீட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜனவரி 30ம் தேதி (திங்கட்கிழமை) விசாரணை நடைபெறுவது உறுதியாகி உள்ளது. மேலும் அன்றைய தினம் 3வது வழக்காக அதிமுக விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. இதனால் ஜனவரி 30ம் தேதி அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்கலாம் என கூறப்படுகிறது. எனவே அதிமுக விவகாரம் மீண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.