ஜெயலலிதா பிறந்த நாள் பெண் குழந்தைகள் தினமாக அறிவிப்பு.. முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு
சென்னை: ஜெயலலிதா பிறந்த நாள் பெண் குழந்தைகளின் தினமாக கடைப்பிடிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 14-ஆம் தேதி நடப்பு நிதியாண்டு 2020-2021-க்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் மீதான விவாதம் தற்போது தமிழக சட்டசபையில் இரு தினங்கள் விடுமுறைக்கு பின்னர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நேற்று முன் தினம் நிராகரித்தார்.
இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபை கூடியது. அப்போது கேள்வி நேரத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24-ஆம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும். இதை 110-விதியின் கீழ் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அது போல் பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு சமூக பொருளாதார நிலையை கருதி சிறப்பு உதவி தொகுப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும் போது ரூ 2 லட்சம் வழங்கப்படும்.