கல்வியும் இலவசமாக கொடுக்கிறோம்.. அதற்காக படிக்காமல் இருந்துவிட முடியுமா?- முதல்வர் எடப்பாடி கேள்வி
சென்னை: கல்வியும் இலவசமாகதான் கொடுக்கிறோம், அதற்காக படிக்காமல் இருந்துவிட முடியுமா? என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படம் கதை திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பிறகு தீபாவளிக்கு வெற்றிகரமாக ரிலீஸாகியது.
இந்த படத்தில் தமிழக அரசு மக்களுக்கு வழங்கிய இலவசங்களை விமர்சிப்பதாகவும் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லியை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு சூட்டியிருப்பதாகவும் ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விமர்சனம்
மறுதணிக்கைக்கு சென்றுவந்த பின்னர் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது. இந்நிலையில் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்திய அதிமுகவினர் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
வேண்டாம்
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது. மேலும் மேலும் பெரிதுபடுத்த வேண்டாம். தலைவனின் திட்டங்களை விமர்சனம் செய்தால் தொண்டர்களுக்கு கோபம்தான் வரும்.
ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்
கோடி கோடியாக செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி அந்த பணம் வந்தது? ரூ.100 டிக்கெட்டை ரூ.1000க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.
எடப்பாடி கேள்வி
இலவசம் வேண்டாம் என்றால் கல்வியும் விலை இல்லாமல் தான் தருகிறோம். அதனால் படிக்காமல் இருந்து விட முடியுமா? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.