ஆஹா.. அவங்களே ஒத்துக்கிட்டாங்க.. சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்த கருத்தால் மாட்டிக்கொண்ட ஈபிஎஸ் டீம்!
சென்னை : உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின்போது, ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் சொன்ன கருத்தையே வெளிப்படுத்தியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு. இது அதிமுக, பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய பாஜக அரசு அழைப்புக் கடிதம் அனுப்பி இருந்தது.
அதனை எதிர்த்து ஓபிஎஸ் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், ஈபிஎஸ் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஈபிஎஸ் தரப்பு நேற்று உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைக்கும்போது, கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களை வழக்கை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் பரிசீலிக்க மறுக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பேச்சை மீறிய ஈபிஎஸ் டீம் மாஜி..? ஜெயலலிதாவுக்கு இன்றே திதி கொடுத்த ஓஎஸ் மணியன்! பரபர!
கிளறிவிட்ட பாஜக
ஜி 20 மாநாட்டை நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்க அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் டெல்லி சென்று கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுகவுக்கு தலைமை யார் என்ற சர்ச்சை நீடித்து வரும் நிலையில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதால் ஓபிஎஸ் கடுமையாக அப்செட் ஆனார்.
தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய பாஜக அரசு அழைப்புக் கடிதம் அனுப்பி இருந்ததால், அவர் இந்தப் பொறுப்பில் இல்லை என தேர்தல் ஆணையத்தைச் சுட்டிக்காட்டி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இல்லை, அதிமுகவுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறேன், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருசிலர் தேர்வு செய்திருப்பதை தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில்
அதிமுக தலைமை யார் என்பது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிவித்திருப்பது துரதிருஷ்டமானது என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் தான் இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்திலும் நேற்று பதிவு செய்துள்ளது.
தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை
அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை வழக்கை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை, பொதுக்குழு செல்லும் என உத்தரவிட வேண்டும், வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். கட்சி செயல்படாத நிலையில் இருப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஓபிஎஸ் கருத்தை ஒப்புக்கொண்ட ஈபிஎஸ்
அதாவது, ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதை ஈபிஎஸ் தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவித்துள்ளது எடப்பாடி பழனிசாமி. அதன்படி, தற்போதைய நிலை வரை தேர்தல் ஆணையத்தின்படி தான் இடைக்கால பொதுச் செயலாளர் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறார் ஓபிஎஸ்.
தள்ளிவைப்பு
இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இயலாத காரணத்தினால் இந்த வழக்கை ஒத்தி வைக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் மறு விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அவங்களே சொல்லிட்டாங்க
இந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்பு முன்வைத்த கருத்தைச் சுட்டிக்காட்டி, அவர்களே, இடைக்கால பொதுச் செயலாளர் இல்லை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள், பாஜக அரசு இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டது தவறு என்பதை பாஜக தலைமை இப்போதாவது உணர்ந்திருக்கும் என ஓபிஎஸ் அணியினர் பேசி வருகின்றனர்.