ஜெ. நினைவிடம் திறப்பிலும் எடப்பாடியார் செம வியூகம்.. "அழும் பிள்ளைக்கு" பொம்மைக்கு பதில் சாக்லேட்!
சென்னை: சசிகலாவின் நினைப்பே அதிமுக தொண்டர்களுக்கும் அதிருப்தியாளர்களும் வராத வகையில் இன்று ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைப்பதில் பக்கா வியூகத்தை முதல்வர் எடப்பாடியார் வகுத்துள்ளார் என்றே சொல்லலாம்.
ஜெயலலிதாவுடன் பழகிய நாள் முதல் சசிகலாவும், நடராஜனும் அரசியல் ரீதியாக ஆலோசனைகளையும் பிளான்களையும் வகுத்து கொடுத்ததாக ஒரு பேச்சு இருக்கிறது. அதிமுகவில் எம்ஜிஆர் இறப்புக்கு பின்னர் ஜெயலலிதாவை அதிமுகவின் தலைவராக கொண்டு வருவதற்கு இவர்கள் இருவரும் உதவியதாகவும் ஒரு கருத்து உள்ளது.
அப்படிப்பட்ட சசிகலா ஜெயலலிதாவுக்கு நெருங்கிய தோழியாக ஆனவுடன் போயஸ் தோட்டத்தில் இருந்து கொண்டு திரை மறைவு ஆட்சி செய்ததாகவும் சொல்லப்படுகிறது. வேட்பாளர்கள் தேர்வு, ஒப்பந்தம் , டெண்டர் பணிகள், கட்சிக்கு நிர்வாகிகள் நியமனம் என அனைத்திலும் சசிகலாவின் செல்வாக்கு ஓங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அறிமுகம்
சுருக்கமாக சொல்ல போனால் ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை பட வேண்டும் என்றால் அதற்கு முதலில் சசிகலாவின் அறிமுகம் தேவை என்ற நிலையே இருந்தது. இந்த தகவல்களை ஜெயலலிதா இறந்த பின்னர் அதிருப்தியில் இருந்தவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியது நினைவுக்கூரத்தக்கது. அதிமுகவில் ஜெ ஆதரவாளர்கள் சசிகலா ஆதரவாளர்கள் என்ற இரு தரப்பினரும் இருந்ததாக கூறப்படுகிறது.
டெண்டர்
ஜெயலலிதாவிடம் தனது ஆதரவாளர்களுக்கு பதவி, வாய்ப்புகள் வழங்க சசிகலா பரிந்துரை செய்ததும் அறிந்ததே. இவ்வளவு ஏன் சிறைக்கு செல்லும் போது சட்டசபை அதிமுக எம்எல்ஏக்களின் தலைவராக எடப்பாடியாரை தேர்வு செய்ய மற்ற எம்எல்ஏக்களிடம் கூறியது சசிதான் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.
தலைகீழான நிலை
சசிகலா சிறை சென்றபின்னர் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஏராளமான சசிகலா ஆதரவாளர்களுக்கு பதவியும் போட்டியிட வாய்ப்பும் கிடைக்காததால் சிலர் அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் நிச்சயம் நல்ல காலம் பிறக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் காத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சின்னம்மா
இதனால் சசிகலா விடுதலை ஆகும் ஜனவரி 27ஆம் தேதி அவரை வரவேற்க அமைச்சர்களோ எம்எல்ஏக்களோ, நிர்வாகிகளோ போகக் கூடும் என்பதால் எடப்பாடியார் செமையாக பிளான் செய்து ஒரு விஷயத்தை செய்து அனைவரையும் ஆஃப் செய்துள்ளார். அதுதான் ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு! அழும் குழந்தைக்கு பொம்மைக்கு பதிலாக சாக்லேட் கொடுத்து சமாதானம் செய்வது போல் எடப்பாடியாரும் சின்னம்மாவின் நினைவே வராமல் இருக்க அம்மா குறித்து நினைவுப்படுத்தியுள்ளார். இதனால் அனைவரும் ஹேப்பி!