சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்
சென்னை: சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.
சென்னையின் மிக முக்கிய பகுதி தியாகராய நகர் எனப்படும் திநகருக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். முக்கிய வர்த்தம் மையமாக இருக்கும் இங்கு பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.
இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பாதசாரிகள் நடந்து செல்லக் கூட முடியாத சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன நடைபாதையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
ரூ 40 கோடி மதிப்பில் நடைபெற்ற இந்த பணிகளால் தமிழகத்தில் முதல் முறையாக பாண்டி பஜார் சாலை முழுமை அடைந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 23 சாலைகள் அமைக்கப்பட்டன. பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளித்து வாகன போக்குவரத்தை சீரமைப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த நிலையில் இதற்கான பணிகள் நிறைவடைந்து இன்று மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டது. இதை கோயில் மணி அடித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார்.
பின்னர் பேட்டரி கார் மூலம் நடைபாதை வளாகம் மற்றும் சாலைகளை அவர் பார்வையிடுகிறார். உடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.