எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார் - தலைமை உத்தரவை மீறிய ஓ.எஸ். மணியன்
முதல்வர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது என்று கட்சித்தலைமை உத்தரவிட்டும் அதனை மீறும் வகையில் பேசியுள்ளார் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
சென்னை: மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் ஆவார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளர் பற்றியும் கட்சிக்கு எதிராகவும் யாரும் தலைமையை மீறி கருத்து சொன்னால் கடும் நடவடிக்கை பாயும் என்று தலைமை எச்சரித்துள்ள நிலையில் அதனை மீறி கருத்து கூறியுள்ளார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
தமிழகத்தின் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சை அடங்கியிருந்த நிலையில் மீண்டும் அமைச்சர்கள் சிலர் சர்ச்சை பேச்சை கிளப்பியுள்ளனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு 2017ஆம் ஆண்டில் இருந்து இந்த இருவரின் தலைமையின் கீழ் கட்சியும், ஆட்சியும் இருந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான் அதிமுகவில் அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. செல்லூர் ராஜூ கொளுத்திப் போட்ட நெருப்பை, ராஜேந்திர பாலாஜி ஊதிவிட பரபரப்பு பற்றிக்கொண்டது. கூடவே அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜெயக்குமார் என தொடர முதல்வர் வேட்பாளர் சர்ச்சை அதிகரித்தது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அன்று நாள்முழுவதுமே முதல்வர், துணை முதல்வர் வீட்டில் மாறி மாறி சந்திப்புகளும் கூட்டங்களும் நடைபெற்றன.
இதனையடுத்து கூட்டணி பற்றியும் முதல்வர் வேட்பாளர் யார் என்று பின்னர் அறிவிப்போம் கட்சிக்கு எதிராக யாரும் தலைமையை மீறி கருத்து சொன்னால் கடும் நடவடிக்கை பாயும் என்று எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூட்டறிக்கை வெளியிட அந்த சர்ச்சை அடங்கிப் போனது.
மேற்குவங்க சட்டசபை தேர்தல்...காங்கிரஸ் இடது சாரி கூட்டணி...அதிர் ரஞ்சன் அச்சாரம்!!
இந்நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்களின் வரவேற்பை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் ஆவார் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த நன்மதிப்பை முதல்வர் பெற்றுள்ளார் என்று பேட்டி அளித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என தலைமை உத்தரவிட்ட நிலையில் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேட்டி அளித்திருப்பது மீண்டும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.