எடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அவருக்கு நெருக்கமானவர்கள், கொஞ்சம் பதட்டம் அடைந்துள்ளனர் என்பது என்னவோ உண்மைதான்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக அரசு முறை பயணமாக, வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 28ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டன் சென்று, அதன் பிறகு அங்கே இருந்து அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, செப்டம்பர் 9ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் சுகாதாரத் துறை தொடர்பான சந்திப்புகள் நடைபெற உள்ளது. எனவே இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றுவிட்டு, சென்னை திரும்பி விடுவார். இதன்பிறகு தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத், முதல்வருடன் லண்டனில் இருந்து அமெரிக்கா செல்கிறார். முதல்வர் அமெரிக்கா செல்லும்போது, சென்னையிலிருந்து அமைச்சர்கள், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் அமெரிக்கா செல்ல உள்ளனர்.
நெருக்கமானவர்கள் யோசனை
2015 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தான போதிலும், நடைமுறையில் பல தொழில்கள் இன்னும் வரவில்லை. இது தொடர்பாக அமெரிக்காவில் தொழிலதிபர்களுடன் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வரை எல்லாமே சிறப்பாக தான் போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் முதல்வர் அமெரிக்காவுக்கு தற்போது செல்ல வேண்டுமா? என்று அவருக்கு வேண்டப்பட்ட சிலர் யோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யோசனை
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தற்போது தமிழகத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்கள் பலம் இருந்தாலும் கூட, மிகப் பெரிய அளவுக்கான எம்எல்ஏக்கள் பலம் இல்லை என்பது உண்மை. பெரும்பான்மைக்கு சற்றே அதிகம், கத்தி மேல் நடப்பது போலத்தான் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் வெளிநாட்டுப் பயணம் செல்லும் போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ்ந்து விடுமோ என்ற ஐயப்பாட்டை அவருக்கு நெருக்கமான சிலர் எழுப்பி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திரா
அண்டை மாநிலங்களில் இது போல நடைபெற்ற சில அரசியல் மாற்றங்களை அதற்கு உதாரணமாகச் சொல்கிறார்கள் அவர்கள். ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ் இதயநோய் பிரச்சனைக்காக 1983ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். சுமார் ஒரு மாத காலம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவிட்டு ஆந்திரா திரும்பிய என்டி ராமராவ் ஆட்சிக்கு எதிராக திடீரென அப்போதைய நிதியமைச்சர் பாஸ்கர் ராவ் தலைமையில் சில அமைச்சர்கள் கலக குரல் எழுப்பினர்.
ஆளுநராக இருந்த ராம் லாலை, சந்தித்து தெலுங்கு தேச எம்எல்ஏக்கள் ஆதரவு எனக்கே உள்ளது என்று தெரிவித்தார் பாஸ்கர் ராவ். இதையடுத்து பாஸ்கர ராவ் கொடுத்த எம்எல்ஏக்கள் பட்டியலை பரிசீலனை செய்த ஆளுநர் மேற்கொண்டு விசாரணை ஏதும் நடத்தாமல் ராமாராவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினார்.
என்.டி.ராமராவ்
இதையடுத்து, என்.டி.ராமராவ் தனக்கு பெரும்பான்மை இருப்பதை குடியரசுத் தலைவர் முன்னிலையில் அணிவகுப்பு நடத்தி உறுதி செய்த பிறகு, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பாஸ்கர் ராவ் தலைமையிலான ஆட்சி கலைந்தது ராமாராவ் மீண்டும் முதல்வரானார். இது பழைய உதாரணம் என்றால் சமீபத்தில் மற்றொரு அமெரிக்க உதாரணமும் அண்டை மாநிலத்தில் நடந்து உள்ளது.
குமாரசாமி அரசு
கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான், திடீரென காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சி கலையவே, காரணமாக அமைந்தனர். குமாரசாமி அமெரிக்காவில் இருந்து பெங்களூர் திரும்புவதற்குள் நிலைமை கைமீறிப் போய்விட்டது. ஒருவேளை அவர் பெங்களூரில் இருந்து இருந்தால், இப்போதும் முதல்வராக குமாரசாமி தான் பதவி வகித்து இருந்திருப்பார் என்கிறார்கள்.
நம்பிக்கை
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா செல்வது சரியாக இருக்காது என்று அவரது ஆதரவாளர்கள் கூறுவதாக அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் இதுபோன்ற ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா, அல்லது தனது கட்சி எம்எல்ஏக்கள் மீது உள்ள அபார நம்பிக்கையின் காரணமாக அமெரிக்கா கிளம்பிச் செல்வாரா, என்பது வரும் வாரத்தில் தெரியவரும்.