தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்வு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்து வந்தது. அதில் நேற்று மட்டும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 10 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஈரோடு மருத்துவமனையிலும், மற்ற 4 பேர் கோவை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு தாய்லாந்து நாட்டினரிடம் இருந்து கொரோனா தொற்றியது.
67 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் தலைமை செயலாளருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா வைரஸ். நேற்று பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த 67 பேரில் 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 121 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியதுள்ளது.
முகக் கவசங்கள்
தமிழகத்தில் 43,537 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 1,641 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள் கொரோனாவுக்கு தற்போதைய ஒரே மருந்து தனிமைப்படுத்துதல்தான். ஒன்றரைக் கோடி முகக் கவசங்கள் வாங்க திட்டமிட்டுள்ளது.
11 லட்சம் முகக் கவசங்கள்
என் 95 தரத்திலான 25 ஆயிரம் முகக் கவசங்கள் வாங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 11 லட்சம் முகக்கவசங்கள் வாங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 30 ஆயிரம் கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்பு கொண்டு தலைமை செயலாளர் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்கிறார். தமிழகத்தில் கொரோனா 2ஆவது நிலையிலிருந்து 3 ஆவது நிலைக்கு செல்வது தடுக்க பணிகள் தீவிரமடைந்துள்ளது.
பரிசோதனை
கொரோனா விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி அரசியல் செய்வது தேவையற்றது. கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மக்களின் நன்மைக்கு தான். சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல. இது போன்ற ஒரு சவாலான நிலையை தமிழக அரசு இதுவரை எதிர்கொண்டது இல்லை. கொரோனா அறிகுறி இருக்கும் நபர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்த முடியும். மேலும் திருமணம், இறப்பு உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே வெளியூர் செல்ல அனுமதிக்கப்படும் என்றார் முதல்வர்.
|
பாதிக்கப்பட்டவர்கள் யார்?
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் குறித்த விவரங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் இன்று 17 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. மதுரையில் 25 வயது ஆண் ராஜாஜி மருத்துவமனையிலும், அமெரிக்காவிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 வயது பெண் பிராட்வேயில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், டெல்லிக்கு சென்ற 10 ஆண்கள் பெருந்துறை மருத்துவமனையிலும், குளித்தலையை சேர்ந்த 42 வயது பெண் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.