காய்கறி, மளிகை, உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கும்.. நேர கட்டுப்பாடு இல்லை.. தமிழக அரசு மறுப்பு
சென்னை: காய்கறி, மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்கும் என்றும் அதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு என்றும் அத்தியாவசிய பொருட்கள் நாள் முழுவதும் கிடைக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களின் முன் தோன்றினார்.
அப்போது அவர் கூறுகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு விதிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்தார்.
இதனிடையே அத்தியாவசிய பொருட்களை விற்பதற்கு நேரம் விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி காய்கறி, பழக்கடைகள் காலை 6 மணி முதல் காலை 9மணி வரை திறந்திருக்கும். உணவகங்களில் காலை சிற்றுண்டி காலை 7 முதல் 9 வரை விற்கலாம். ஓட்டல்களில் மதிய உணவு பிற்பகல் 12 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கிடைக்கும். இரவு உணவு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கிடைக்கும் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் முதல்வர் தற்போது சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் அத்தியாவசிய பொருட்களுக்கான நேரம் ஒதுக்கீட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் நாள் முழுவதும் திறந்திருக்கும். தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அது ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.