வெற்றி தோல்வி என்பது சக்கரம் மாதிரி.. இன்று நீங்க.. நாளை நாங்க.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
Recommended Video
சென்னை: விஜய் படத்தில் வரும் வசனத்தை கையில் எடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கேள்விக்குப் பதிலடி கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் விடாமல் மாறி மாறி அதிரடியாக வாதம் புரிந்ததால் சட்டசபையே கலகலப்பானது.
சட்டசபை என்றால் வாதமும், பிரதிவாதமும் அனல் பறக்க, சுவை தெறிக்க இருந்தால்தான் ஒரு இதுவாக இருக்கும். கருணாநிதி முதல்வராக இருந்தபோது வாதங்கள் படு சுவாரஸ்யமாக இருக்கும். எதிர்க்கட்சியினர் வைக்கும் ஒவ்வொரு புகாருக்கும், தனது பாணியில் கலக்கலாக பதிலளிப்பார் கருணாநிதி.
ஜெயலலிதா காலத்தில் இது வேறு ஸ்டைலுக்கு மாறியது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இப்போது தனது ஸ்டைலில் கலக்க ஆரம்பித்துள்ளார். இன்று சட்டசபையில் அவருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான வாதமே அதற்கு நல்ல சான்றாகும்.
ஸ்டாலின் பேச்சு
மு.க.ஸ்டாலின் பேசுகையில், சட்டசபைக்கு நடந்த இடைத் தேர்தலில் நாங்கள் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அதில் 12 தொகுதிகள் அதிமுகவிடமிருந்து கைப்பற்றியது. இதுதான் வளர்ச்சி என்று கூறினார்.
தனித் தனியாக
உடனே இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், லோக்சபா தேர்தலையும், சட்டசபை இடைத் தேர்தலையும் ஒன்றாக நடத்தி விட்டனர். தனித் தனியாக நடத்தியிருந்தால் எங்களது பலத்தைக் காட்டியிருப்போம் என்று அதிரடியாக கூறினார்.
நிறைவேற்றுவோம்
உடனே மு.க.ஸ்டாலின் நாங்கள் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம். ஒன்று விடாமல் நிறைவேற்றுவோம். சொல்லாததையும் சேர்த்து நிறைவேற்றுவோம் என்றார்.
நீங்க ஏமாத்திட்டீங்க
அதைக் கேட்ட முதல்வர், நிறைவேற்ற முடியாததை சொல்லி வாக்கு கேட்டு மக்களை ஏமாற்றியுள்ளீர்கள். நாங்கள் அப்படி இல்லை. உண்மையை மட்டுமே சொல்லி வாக்கு கேட்டோம். 9 இடங்களில் வென்றோம். கடந்த லோக்சபா தேர்தலில் நாங்கள் 37 தொகுதிகளில் வென்றோம்.
சக்கரம் மாதிரி
வெற்றி தோல்வி என்பது சக்கரம் மாதிரி. சுற்றிக் கொண்டே இருக்கும். இன்று கீழே போகும், நாளை மேலே இருக்கும். எனவே மீண்டும் நாங்களே ஆட்சியைப் பிடிப்போம் என்று கூற ஆளுங்கட்சியினர் மேசைகளைத் தட்டி ஆர்ப்பரித்தனர்.
இன்னிக்கு கீழே நாளைக்கு மேலே
திருமலை படத்தில் இப்படித்தான் விஜய் வசனம் பேசி இருப்பார். வாழ்க்கை என்பது வட்டம்டா. இன்னிக்கு மேலே இருக்கிறவன் நாளைக்கு கீழே இருப்பான். கீழே இருக்கிறவன் மேல இருப்பான் என்று பேசியிருப்பார். அதே பாணியில் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று சட்டசபையில் அதிரடி காட்டி திமுகவினரை தெறிக்க விட்டார்.