எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை, தாக்கு: அமமுகவினர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும்போது எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வாகனங்கள் அமமுகவினரால் முற்றுகையிடப்பட்டது. செருப்பு வீச்சும் நடந்தது. இதுகுறித்த அதிமுக புகாரின்பேரில் அமமுகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதா மறைந்த 5 ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுகவினரால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. காலை அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் அதிமுக முன்னணியினர் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தானில் ஷாக்! திருமண விழாவில் பங்கேற்ற ஓமிக்ரான் நோயாளிகள்.. பலருக்கும் வைரஸ் பரவ வாய்ப்பு
அதிமுக, அமமுக, சசிகலா
அதிமுகவினர் தவிர டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர், சசிகலா , கே.சி.பழனிசாமி என தனித்தனியாக அஞ்சலி செலுத்த போலீஸார் அனுமதி அளித்திருந்தனர். முதலில் அதிமுக அடுத்து அமமுக அடுத்து சசிகலா என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதிமுகவினர் அஞ்சலி செலுத்தியபின்னர் கலைந்துச் சென்றனர்.
கார் முற்றுகை கோஷம்
அப்போது அமமுகவினர் ஊர்வலமாக வருவதற்காக குவிந்திருந்தனர். அஞ்சலி முடிந்து ஓபிஎஸ்-இபிஎஸ் கார்கள் ஒன்றாக புறப்பட்டது. அப்போது அங்கு குவிந்திருந்த அமமுகவினர், அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓபிஎஸ் - இபிஎஸ் வாகனங்கள் முற்றுகையிடப்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு எதிராக கோஷமிடப்பட்டது. செருப்பு வீசப்பட்டு எடப்பாடி பழனிசாமி கார்மீது அது விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு அமைதிப்படுத்தி கார்கள் செல்ல வழி ஏற்படுத்திக்கொடுத்தனர்.
ஜெயக்குமார் கண்டனம்
இந்த நிகழ்வு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "நாங்கள் வெளியே வருவதற்குள்ளாகவே அமமுக தொண்டர்களை காவல் துறையினர் அனுமதித்து விட்டார்கள். கலவரம் ஏற்படவேண்டும் என்பதற்காகவே திமுக இப்படி செய்கிறது. இதற்கு காவல் துறையினர் துணை போய் இருப்பது வேதனையாக உள்ளது. பதிலுக்கு நாங்களும் சட்டத்தை கையில் எடுத்தால் நிலைமை மோசமாகி இருக்கும்.
சட்டத்தை மதிப்பதால் அமைதியாக இருந்து விட்டோம். துக்க நிகழ்ச்சியில் அமமுகவினர் கார்களை வழிமறித்து கூச்சலிடுவது வருந்ததக்கது. அதிமுக - அமமுக இடையே மோதலை உருவாக்கி திமுக குளிர் காய நினைத்தது" என விமர்சித்திருந்தார்.
வழக்குப்பதிவு
ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்த வந்த போது முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ பன்னீர் செல்வம் கார் மீது செருப்பு வீசி தாக்க முயன்றதாக, அதிமுக பிரமுகர் மாறன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
தாக்கியதில் மைலாப்பூர் மயிலாப்பூர் அம்மா பேரவை துணைச் செயலாளரான மாறன் என்பவர் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ, பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காலை 10 மணி அளவில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தபொழுது 10-45 மணி அளவில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே டிடிவி தினகரன் தூண்டுதலின்பேரில் அமமுக அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களைக்காட்டியும், செருப்பை கார் மீது வீசியும், அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
கட்டைகளாலும் செருப்பாலும் என் மீதும், செங்கல்பட்டு மேற்கு எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜப்பா மீதும் பட்டு காயம் ஏற்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என தெரிவித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் மீது அண்ணா சதுக்கம் போலீசார் 294(b) (அவதூறாக பேசுதல்),148 (ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல்) , 323(காயம் ஏற்படுத்துதல்) , 506(2) (கொலை மிரட்டல்), வாகனத்தை தாக்கியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.