21 நாள் ஊரடங்கு விடுமுறை அல்ல.. உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு- முதல்வர்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் அமல்படுத்திய 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என்பது விடுமுறை அல்ல. உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு ஆகும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் காய்கடை, மளிகைக் கடை, பால் பாக்கெட் கடை, மருந்து கடை தவிர்த்து மற்ற கடைகள் மூடப்பட்டது.
ஆலோசனை
மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் மக்கள் பெரும்பாலானோர் அந்த விதிகளை பின்பற்றவில்லை. போலீஸார் கைகூப்பி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு தமிழகத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
தேர்ச்சி
இதையடுத்து இன்று இரவு 7 மணிக்கு அவர் தமிழக மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசுகையில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி வழங்கப்படும். மதம், ஜாதி, பொருளாதாரம் கடந்த மக்கள் ஒன்று கூட வேண்டும் . மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல. இது உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு ஆகும். கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்.
குடும்பத்தில் ஒருவன்
தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவிற்கு எதிராக அரசு மட்டும் தனியா போராட முடியாது. எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும்: மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும், மக்கள் அச்சப்பட வேண்டாம்.
எடப்பாடி உரை
சமூக விலகலை கடைபிடியுங்கள். ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். பொறுப்பான குடிமக்களாக இருந்து சமூதாயத்தை காப்போம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கொரோனா தொடர்பாக ஏற்கெனவே இரு முறை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிட்ம உரையாற்றிய நிலையில் தற்போது முதல்முறையாக தமிழக மக்கள் முன் எடப்பாடி உரையாற்றினார்.