தமிழகத்தில் தொழில் துவங்குகிறதா பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ..? மொத்தம் 11.. முதல்வர் அதிரடி கடிதம்
சென்னை: மோட்டார் வாகனத்துறையில் முன்னணியில் உள்ள 11 நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று, கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகம் முழுக்க தொழில்துறை நசிவடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தொழில்துறையை மீட்டெடுக்க ஒரு டாஸ்க் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்தார்.
இது 17 பேர் கொண்ட குழுவாகும். இந்த குழு, தமிழகத்திற்கு எந்தெந்த தொழில் முதலீடுகளை கொண்டுவருவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி செயலில் குதித்துள்ளன.
சரியான போட்டி.. இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் பேஸ்புக், கூகுள், அமேசான்.. ஜியோ, ஏர்டெலுக்கு லக்
டாஸ்க் குழு
அந்த குழு தனது ஆலோசனைக்கு பிறகு, கார் உற்பத்தியில் உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் கண்டறிந்து அரசு தெரிவித்தது. இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் எலோன் மஸ்க் உட்பட 11 முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.
பென்ஸ், ஆடி கார்கள்
பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ, ஜாக்குவார், லேண்ட்ரோவர், வோல்க்ஸ்வேகன், ஸ்கோடா உள்ளிட்ட உலகின் முன்னணி 11 நிறுவனங்களில் இதில் அடங்கும். ஏற்கனவே விமான நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். இப்போது கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி, முதலீடு செய்ய வருமாறு அவர் அழைப்புவிடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.
வாகன உற்பத்திக்கு ஒத்துழைப்பு
வாகன உற்பத்திக்கு ஏற்ற இடமாக தமிழகம் உள்ளது, எனவே நீங்கள் இங்கு முதலீடு செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் முதலீடுகளை செய்வதில் உள்ள பல்வேறு சாதகமான சூழ்நிலைகள், ஒத்துழைப்புகள் தொடர்பான விஷயங்களையும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் டெட்ராய்டு சென்னை
முதலீட்டாளர்களுக்கு உரிய உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்.. அதிலும் குறிப்பாக சென்னை, இந்தியாவின் டெட்ராய்டு என அறிவிக்கப்படுகிறது. ஆசியாவின் டெட்ராய்டு என்று கூட அழைக்கப்பட்ட காலங்களும் உண்டு. அமெரிக்காவிலுள்ள டெட்ராய்டு பகுதி, கார் மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் உற்பத்திக்கு உலகளவில் பெயர் பெற்றது. எனவே, சென்னையும் அப்படி அழைக்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக கார் உற்பத்தி சார்ந்த தொழில்கள் நசிவடைந்து வருகின்றன. எனவே இழந்த பெருமையை மீட்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். அரசுக்கு வருவாய் வருவதோடு, பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில்கள் இவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.