"சென்ட்டிமென்ட்".. அதே இடம்.. அதே பாணி.. "அவரை" போலவே... வரிந்து கட்டி களம் இறங்கிய எடப்பாடியார்
திருப்போரூரில் சென்ட்டிமென்ட்டாக பிரச்சாரத்தை துவக்கினார் எடப்பாடி பழனிசாமி
சென்னை: எடப்பாடியாரையும் விட்டுவைக்கவில்லை சென்ட்டிமென்ட்.. ஜெயலலிதா பாணியில் தன்னுடைய பிரச்சாரத்தையும் முன்னெடுத்ததால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழக அரசியலையும், சென்ட்டிமென்ட்டையும் நம்மால் பிரித்து பார்க்க முடியாது.. தனிப்பட்ட முறையில், தலைவர்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் பொதுப்படையாக சென்ட்டிமென்ட் பார்ப்பது என்பது காலம் காலமாகவே நடந்து வருகிறது. இதற்கு திமுக உட்பட யாருமே விதிவிலக்கு இல்லை.
மறைந்த கருணாநிதி தேர்தல் சம்பந்தமான முக்கிய அறிவிப்பு ஏதாவது இருந்தால் திருச்சியில் சென்றுதான் பெரும்பாலும் அறிவிப்பார்.. முக்கிய முடிவுகளை எடுப்பார்.. அதுபோலவே, தேர்தல் காலங்களில் திருச்சி ஜி கார்னர் மைதானம் திருப்புமுனையை ஏற்படுத்தும் இடமாகவும், வின்னிங் சென்டிமென்ட் இடமாகவும் கருதப்படுகிறது.
ஜெயலலிதா
ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் இங்கிருந்து பிரச்சாரத்தை துவக்கி இருக்கிறார்கள்.. அதுபோலவே திருப்பூர் பெருமாநல்லூரையும் சென்ட்டிமென்ட் இடம் என்று சொல்வார்கள்.. இந்த லிஸ்ட்டில் அதிமுகவில் டாப்பில் உள்ளது திருப்போரூர் கோயில் பகுதிதான்!
பிரச்சாரம்
கடந்த 1987-ல் எம்ஜிஆர் இறந்தவுடன் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது. அப்போது ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்... அந்த தேர்தல் அவருக்கு மிக முக்கியமான தேர்தல்.. தன்னை நிலைப்படுத்தி கொள்ளவும், தன் சக்தியை நிரூபிக்கவும் வாய்ப்பாக அமைந்த தேர்தல்.
மாஸ் வெற்றி
அப்போது, 1988ம் ஆண்டு மே 30-ம் தேதி திருப்போரூர் வந்த ஜெயலலிதா, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் அருகேதான், வேனில் இருந்தபடியே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்... மாஸ் வெற்றி பெற்றார்.. அப்போது பெற்ற வெற்றியை இறுதிவரை தக்க வைத்து, கட்சியையும் கட்டிக் காத்தார்.. அன்றுமுதலே சென்டிமென்டாக அதே இடத்தை அதிமுகவினர் கருதி வருகின்றனர்.. இப்போதும் அதே இடத்தைதான் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துள்ளார்.
பிரச்சாரம்
ஏற்கனவே சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்கு சென்று விட்டு மறுபடியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.. திருப்போரூர் கந்தசுவாமி கோவில் அருகே, ஓஎம்ஆர் சாலையில் பிரச்சாரம் செய்துள்ளார். ஜெ-க்கு எப்படி அன்றைய நாள் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை தந்ததோ, அப்படி ஒரு சவாலான தேர்தலைதான் இந்த முறையும் எடப்பாடியார் எதிர்கொள்ள போகிறார்.
நெருக்கடி
ஜெ-வுக்கு ஜானகி இருந்ததைபோல, இந்த முறை எடப்பாடியாருக்கு ஒருபக்கம் திமுக, இன்னொரு பக்கம் சசிகலா, கூடவே ஓபிஎஸ், பக்கத்தில் பாஜக, என நாலாபக்கமும் நெருக்கடிகளை வைத்துள்ளார்.. அனைத்தையும் எதிர்கொண்டு எடப்பாடியார் மீண்டும் வெற்றி பெறுவாரா? ஜெ.போல "ஜே" ஆட்சி தருவாரா? பார்ப்போம்..!