எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி.. எண்டோஸ்கோப்பி சிகிச்சை.. நலம்பெற தொண்டர்கள் வாழ்த்து
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எண்டோஸ்கோப்பி சிகிச்சையாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கடந்த ஏப்ரல் மாதம் (முதல்வராக இருந்தபோது) சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில், அது தொடர்பான எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்காக எடப்பாடி பழனிச்சாமி இன்று அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
சசிகலா மீது அதிமுக போலீசில் புகார்..எடப்பாடி பழனிசாமி சொன்ன சில மணி நேரத்தில்.. அரங்கேறிய காட்சிகள்
ஆளுநருடன் சந்திப்பு
எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து திமுக தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக மனு கொடுத்தார். உள்ளாட்சி தேர்தலில் நடந்த குளறுபடிகள் மட்டுமின்றி, நகராட்சி மன்ற தேர்தலில் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சசிகலா மீது தாக்கு
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திடீர் சிகிச்சை
பரபரப்பாக இயங்கிய எடப்பாடி பழனிச்சாமி இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றுதான் என்கிறார்கள். ஏனென்றால், எடப்பாடி பழனிச்சாமிக்கு குடலிறக்க பிரச்சனை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அது தொடர்பாக இன்று காலை 6:30 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்ஜிஎம் மருத்துவமனையில் அறை எண் 11ல் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை தொடர்பாக எண்டோஸ்கோப் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்று மதியத்திற்குள், எடப்பாடி பழனிச்சாமி, வீடு திரும்பும் வாய்ப்பு உள்ளது.
அதிமுக தகவல்
எனவே இது திட்டமிட்ட ஒரு சிகிச்சைதான் என்றும், அதிமுக தொண்டர்கள் அச்சப்படத் தேவை கிடையாது என்றும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் எடப்பாடி பழனிசாமி பூரண குணமடைந்து தொடர்ந்து தீவிர அரசியலில் இயங்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தொண்டர்கள் வர வேண்டாம்
எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனை அருகே காலை முதல் வரிசையாக தொண்டர்கள் வருகை தந்த நிலையில் தொண்டர்கள் வரவேண்டாம் என்றும் அதிமுக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர், இதனால் தொண்டர்கள் வருகை தற்போது அங்கு இல்லை.