5 பேர் குறி.. அதிமுகவில் இன்னொரு பிளவு! டெல்லி போடும் ‘ஷிண்டே’ கணக்கு.. எடப்பாடிக்கு 'ரெட்’ அலெர்ட்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி அணியிலேயே ஒரு பிளவை ஏற்படுத்த பாஜக தலைமை திட்டம் தீட்டி வருகிறது என பகீர் கிளப்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள். திமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்குகிறார்களோ இல்லையோ, அதிமுகவில் அதற்கான வேலைகளில் டெல்லி ஈடுபட்டு வருகிறது என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் 5 பேரை குறிவைத்து பாஜக காய்களை நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு முன்னாள் அமைச்சரை தங்கள் வழிக்குக் கொண்டுவர பாஜக முயல்வது வெளிப்படையாகவே தெரிவதாக பேச்சுகள் நிலவி வருகின்றன.
2024 தேர்தலை குறிவைத்து மட்டுமல்லாமல், நீண்டகால நோக்கிலும், அதிமுக தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதையே பாஜக தலைமை விரும்புகிறது. அதையொட்டி மாஜிக்கள் மூலம் சில நெருக்கடிகளை ஈபிஎஸ்ஸுக்கு கொடுக்கும் விதமாக காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள்.
உதயநிதி பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்ட பள்ளி மாணவர்களுக்கு நிர்பந்தம்.. பாஜக நாராயணன் குற்றச்சாட்டு
அப்போதே குறி
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு வழக்குகள் பின்னப்பட்டுள்ளன. விஜயபாஸ்கர் மீதான பிடி இறுகுவது இப்போது என்றாலும், 2017லேயே விஜயபாஸ்கரை குறிவைத்து விட்டது பாஜக. அதற்குக் காரணம், அதிமுகவை தங்கள் கண்ட்ரோலில் வைப்பதற்காக சசிகலாவை கட்டம் கட்டும்போது, அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் பற்றிய விவரங்களைத் தோண்டியது டெல்லி. அதில் சிக்கியவர் தான் விஜயபாஸ்கர் என்கிறார்கள்.
விஜயபாஸ்கர்
குவாரியில் வரி ஏய்ப்பு, சேகர் ரெட்டி விவகாரம், குட்கா நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்ற விவகாரம் என விஜயபாஸ்கர் சுற்றி வளைக்கப்பட்டார். கூடுதலாக, கூவத்தூரில் கைமாறிய பணத்தில் பெரும் பங்கு விஜயபாஸ்கருடையது என்றும் பாஜக மோப்பம் பிடித்ததாக கூறப்படுகிறது. சசிகலா சிறை சென்ற பிறகு விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவாளராக மாறிய பிறகு, டெல்லியின் குட்புக்கில் இடம்பெற விஜயபாஸ்கர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
நெருக்கடி
அதன் பிறகு விஜயபாஸ்கர் மீதான வழக்குகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில், இப்போது தூசி தட்டிக் கிளப்பப்படுவதற்குப் பின்னணியில் இருப்பது டெல்லியின் கணக்குகள் தான் என்கிறார்கள். ஈபிஎஸ் அணியின் முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம், தங்கள் முயற்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமியை முழு ஒப்புதல் அளிக்க வைக்க பாஜக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
இறுகும் பிடி
வருமான வரித்துறை தற்போது விஜயபாஸ்கரை நேரடியாக குற்றம்சாட்டி இருக்கிறது. சேகர் ரெட்டியிடம் இருந்து பணம் வாங்கியது, குட்கா நிறுவனங்களிடமிருந்து பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறுகிறது. மேலும், கூவத்தூர் மர்மங்களையும் முழுமையாக கையில் வைத்திருக்கின்றனர். அதனால், மேலும் சில முன்னாள் அமைச்சர்களும் ஆடிப்போய் இருக்கிறார்களாம்.
டெல்லியை நோக்கி
தன் மீதான பிடி நெருங்க நெருங்க டெல்லியை நோக்கி நகர்ந்து வருகிறார் விஜயபாஸ்கர். எடப்பாடி பழனிசாமி அணியோடு அவர் இயங்குவதே இல்லை. எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் மோதல் பற்றி ஈபிஎஸ் அணியின் மற்ற மாஜிக்கள் போல எந்த அதிரடி பேச்சுகளும் இல்லை, தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் நட்டாவை ஈபிஎஸ்ஸுக்கே சொல்லாமல் தனியாகப் போய் பார்த்தார், தொடர்ந்து டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தார்.
மறைமுக அலெர்ட்
இது ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமி அணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ரெட் அலெர்ட் என்கிறார்கள். இது போகப்போக இன்னும் பெரிதாகும் என்றும் அதிமுக மேலிட வட்டாரத்தில் சலசலப்புகள் நிலவி வருகின்றன. அதிமுகவில் எப்போதுமே தங்கள் கை இருக்க வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கும் பாஜக தலைமை, ஈபிஎஸ் அணிக்குள் ஒரு ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்க நினைக்கிறது என்கிறார்கள். அதன் மூலம் ஈபிஎஸ்ஸை தங்கள் திட்டப்படி இயக்கலாம் எனக் கணக்குப் போட்டிருக்கிறார்களாம்.
பாஜக வளையத்தில்
பாஜக தலைமைக்கு நெருக்கமான அதிமுக எம்.பி ஒருவர் சமீபத்தில் பாஜகவின் முக்கிய அமைச்சரை சந்தித்தார். அதன்பிறகு தமிழகம் வந்த அவர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அணிக்குள், பாஜக ஆதரவுக் குரல்களை எழுப்பக்கூடிய அந்த சிலர் தான் பாஜகவின் வளையத்தில் இருப்பவர்கள் என்கிறார்கள். அவர்களின் வசமே ஏராளமான எம்.எல்.ஏக்கள் இருப்பதால், அவர்களை மீறி எடப்பாடி எதுவும் செய்ய முடியாது என்ற நிலை இருக்கிறது. அதைத்தான் பாஜக தலைமை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது எனக் கூறப்படுகிறது.