ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம்.. நினைவு இல்லமாக மாற்றி திறந்து வைத்த எடப்பாடியார்! உள்ளே என்ன உள்ளது?
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள, வேதா இல்லம் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டது.
Recommended Video
ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய 'வேதா நிலையம்' வீட்டை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அவ்வாறு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தார்.
அதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவினர் வேதா நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக என்னென்ன ஏற்பாடுகளை செய்யலாம் என்பது குறித்து 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
வேதா இல்லம் திறப்பு
பின்னர் இதுதொடர்பான பரிந்துரையை அந்தக் குழுவினர் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிந்துரையின்படி ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளன. இன்று வேதா நினைவு இல்லம் திறக்கப்படுகிறது. இதற்கு நிபந்தனைகளுடன் ஹைகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. முக்கியமாக பொது மக்களை பார்வையிட அனுமதிக்க கூடாது என ஹைகோர்ட் கூறியுள்ளது.
இன்று காலை
இந்த நிலையில் இன்று காலை 10.50 மணிக்கு வேதா நினைவு இல்லம் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில், எடப்பாடி பழனிச்சாமி வேதா இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், வீட்டுக்குள், குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. முன்னதாக, வீட்டு முன்பு வைககப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்திற்கு, எடப்பாடியார், பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பிரமாண்ட வீடு
வேதா நிலையம்' 10 கிரவுண்டு (24 ஆயிரம் சதுர அடி) பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ள வீடு ஆகும். அங்கு நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும்.
தங்கம், வெள்ளி நகைகள்
இங்கு 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள 867 வெள்ளிப் பொருட்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன. சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையிலான பிளாக் அன்டு ஒயிட்அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா
இன்றைய திறப்பு விழாவில் தலைமைச்செயலாளர் க.சண்முகம், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் க.மணிவாசன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.