மொத்தமா சிதறிடுச்சே.. ஈபிஎஸ் நம்பிக்கையை உடைத்த ‘டெல்லி’.. அவங்க ‘கை’ இருக்குமோ? ஒரு கண் வைங்க!
சென்னை : இன்று (நவம்பர் 30) நமக்கு சாதகமான உத்தரவு வரும், டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் நடத்தலாம் என எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களிடம் நம்பிக்கையோடு கூறியிருந்த நிலையில், நேற்று உச்ச நீதிமன்றத்தின் முடிவால் கடுமையாக அப்செட் ஆகியிருக்கிறாராம் ஈபிஎஸ்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணை டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது. முன்னதாக, நவம்பர் 30 (இன்று) விசாரணைக்கு வருவதாக இருந்தது.
நிர்வாக காரணங்களால் வழக்கு தாமதாமக பட்டியலிடப்பட்டுள்ளது எடப்பாடி பழனிசாமியின் திட்டத்தை கொலாப்ஸ் செய்துள்ளது என்கிறார்கள் அவரது தரப்பினர். அதேசமயம், ஒரு வாரம் தாமதமானது ஓபிஎஸ் தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஈபிஎஸ் டீம் 'டாப்’ தலைவருக்கு டெல்லி புள்ளியின் அசைன்மென்ட்? அதே நாளில் நடந்த மீட்டிங்! கேம் மாறுதே!
பன்னீர் - எடப்பாடி பரபர
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டு வருன்றனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இறுதி தீர்ப்பைப் பொறுத்துதான் அதிமுக தலைமை அதிகாரம் யாருக்கு என்பது தெரியவரும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியாது என திட்டவட்டமாகக் கூறி வருகிறார். இரு தரப்புக்குமே சின்னம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, மோதிப் பார்ப்பது எனக் களமிறங்கியுள்ளதால் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
திடீர் மாற்றம்
அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஒன்றரை மாத கால இடைவெளிக்குப் பிறகு கடந்த 21ஆம் தேதி நடந்த விசாரணையில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். ஆனால் விசாரணை பட்டியலில் டிசம்பர் 6ஆம் தேதி என விசாரணை என இருந்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் நேற்று (29ஆம் தேதி) நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் முறையிடப்பட்டது.
முடியாது முடியாது
அவசர வழக்காக கருதியே விசாரணை 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டதாகவும் வழக்கு விசாரணை தள்ளிப்போவதால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் கூறிய எடப்பாடி பழனிசாமி தரப்பு உடனடியாக நாளையோ அல்லது டிசம்பர் 6ஆம் தேதிக்கு முன்னதாகவோ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரியது. அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் டிசம்பர் 13ஆம் தேதி விசாரணையை தள்ளிவைக்க கோரினார். இரு தரப்பு கோரிக்கைகளையும் நிராகரித்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற அமர்வுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் டிசம்பர் 6ஆம் தேதி திட்டமிட்டபடி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
அப்டேட் கேட்டு வந்த ஈபிஎஸ்
அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான இடைக்கால தடை நீடிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்கூட்டியே விசாரணை கோரிய நிலையில், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தகவல் ஈபிஎஸ்ஸுக்கு சொல்லப்பட்டதும் அவர் கடுமையாக அப்செட் ஆகியுள்ளார். ஏனெனில், இந்த வழக்கு இன்றோடு (நவம்பர் 30) முடிவடைந்து, தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு டெல்லியில் இருந்து வரும் என பெரிதும் எதிர்பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் இருக்கும் எம்.பி சி.வி.சண்முகத்திடமும், மூத்த வழக்கறிஞர்களிடமும் தொடர்ந்து அப்டேட் விசாரித்து வந்துள்ளார் ஈபிஎஸ்.
நம்பிக்கையாகப் பேசிய ஈபிஎஸ்
அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும், அதாவது, நவம்பர் 30 அன்றே கூட முடிவு வரலாம், இல்லையென்றாலும், நமக்கு சாதகமான உத்தரவுகள் வரும் எனச் சொல்கிறார்கள். மூத்த வழக்கறிஞர்களிடம் பேசினேன்.. நமக்கு சாதகமாகத்தான் நிலைமை இருக்கிறது. நவம்பர் 30ஆம் தேதி நல்ல முடிவு வந்ததும், டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவுநாளன்று நாம் மிகப்பெரிய அளவில் கூட்டத்தை திரட்டி நம் வெற்றியைக் கொண்டாடுவோம், தயாராக இருங்கள் என தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஓபிஎஸ் கொடுத்த நெருக்கடி
இந்நிலையில் தான், வழக்கு விசாரணை திடீரென டிசம்பர் 6ஆம் தேதிக்கு (ஜெயலலிதா நினைவு நாளுக்கு மறுநாள்) மாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் ஈபிஎஸ். இதுகுறித்து நேற்று முன்தினம் தகவல் கிடைத்ததுமே எப்படி நடந்தது என வழக்கறிஞர்களிடம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் நாம் மூவ் செய்யலாமா என விசாரித்து சீக்கிரம் கொண்டு வரப் பாருங்கள் எனக் கூறியுள்ளார். அதன்படியே, நேற்று ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள், வேறொரு வழக்கின் அமர்வில் முன்கூட்டியே விசாரிக்கக் கோரினர். அதேசமயம் ஓபிஎஸ் தரப்பு, டிசம்பர் 13ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரியது.
உறுதியாக கூறிய சுப்ரீம் கோர்ட்
முடிந்தவரை கால தாமதம் செய்வது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் என்ற கணக்கிலேயே ஓபிஎஸ் தரப்பு இந்த முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியோ, முடிந்தவரை சீக்கிரம் வழக்கை முடித்து பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டும், அப்போதுதான் பாஜகவிடமும் கட் அண்ட் ரைட்டாக பேசலாம் என்ற முடிவில் இருந்தார். எனினும், உச்ச நீதிமன்றம் 6ஆம் தேதிதான் விசாரணை என உறுதிபடத் தெரிவித்து விட்டது.
அப்செட் - டெல்லி கை?
இன்று (நவம்பர் 30) தீர்ப்பு வந்தால், ஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5ஆம் தேதிக்கு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி பிரமாண்டம் காட்டலாம் என திட்டமிட்டிருந்த நிலையில், விசாரணை தள்ளிப் போனதால் ஏமாற்றமடைந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் தரப்பு கேட்டுக்கொண்டபடி டிசம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படவில்லை என்றாலும் கூட ஈபிஎஸ் கோரிக்கை ஏற்கப்படாதததற்கே மகிழ்ச்சி அடைந்திருக்கிறதாம் ஓபிஎஸ் தரப்பு. விசாரணை தள்ளிப் போனதற்குப் பின்னணியில் பாஜக தலைமையின் கை ஏதேனும் இருக்குமா என்றும் டெல்லியில் விசாரிக்கச் சொல்லி இருக்கிறாராம் ஈபிஎஸ்.