குமரகுருவை நிறுத்த சொல்லுங்கள்.. உத்தரவாதம் வாங்கிய கள்ளக்குறிச்சி பிரபு!
Recommended Video
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வான கள்ளக்குறிச்சி பிரபு முதல்வரை சந்த்தித்து பேசினார். அப்போது குமரகுருவால் நான் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன் ஆகவே அவரை நிறுத்த சொல்லுங்கள் நான் உங்களுடனே நின்று விடுகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறி அதுதொடர்பாக முதல்வரிடமிருந்து உத்தரவாதமும் வாங்கிக் கொண்டாராம்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ யாக இருப்பவர் பிரபு. இவர் உட்பட ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் தினகரனின் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டிஸ் அனுப்பினார் ஆனால் நீதிமன்றம் தலையிட்டதால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. இப்படி இருந்த சூழலில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் கடந்த வாரத்தில் முதல்வரை சந்தித்து தங்களை மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக்கி கொண்டனர். கள்ளக்குறிச்சி பிரபு மட்டும் முதல்வரை சந்திக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ப.மோகனின் ஏற்பாட்டினால் சட்டமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளான ஜூலை 20 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறையில் பூங்கொத்துடன் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது முதல்வரிடம் பேசிய பிரபு உங்கள் மீது எனக்கு எந்தவித தனிப்பட்ட பகையும் இல்லை என்று பேசியுள்ளார். ஆனால் கடந்த மே மாதம் ஒன் இந்தியா தமிழுக்காக நம்மிடம் பேசிய அவர் நான் சின்னம்மாவின் (சசிகலா) தீவிர விசுவாசி, தினகரன் அண்ணன் தான் எனக்கு எல்லாம் என்று பேசினார். இப்போது அப்படியே அந்தர் பல்டி அடித்து எடப்பாடியிடம் சென்று சேர்ந்துள்ளார். முதல்வரிடம் தொடர்ந்து பேசிய அவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எனக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருகிறார் அவரை அழைத்து நீங்கள் கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும் எம்.எல். எ வுமான குமரகுருவுக்கும் பிரபுவுக்கும் ஏழாம் பொருத்தம்தான். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு தினகரன் வெளியேற்றப்பட்டபோது அவருக்கு பிரபு ஆதரவு தெரிவித்து வந்தார். அதோடு அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலப் பொறுப்பிலும் இருந்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த பிரபு "எங்கள் மாவட்டத்தில் இருக்கின்ற ஆட்கள் போல 30 சதவிகிதம், 40 சதவிகிதம் என கமிஷன் வாங்கிக் கொண்டு நான் செயல்படவில்லை. தொகுதி வளர்ச்சிக்கு ஒதுக்கக் கூடிய நிதியை அந்தந்த பகுதிக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது மட்டுமல்லாமல், அதைக் கண்காணித்தும் வருகிறேன்.
இவர்களைப் போல நான் பர்சன்டேஜ் வாங்கும் வேலையைச் செய்யவில்லை" என்று குமரகுருவை குறிப்பிட்டு சொல்லியிருந்தார். அதோடு "கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்கும் கோரிக்கை, தாமதம் ஆனதற்கும் இவர்தான் காரணம். அம்மா இருக்கும்போது இதற்கான ஃபைல் அனைத்தும் தயாராக இருந்தன. அம்மா இறந்த பிறகு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகரத்தை உளுந்தூர்பேட்டை பக்கம் கொண்டு போவது தொடர்பாக என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு நான் உடன்படவில்லை" என்றும் கூறியிருந்தார்.
இப்படியாக இவருக்கும் குமரகுருவுக்கும் இருக்கும் ஏழரையில் பிரபு மாவட்ட அமைச்சரும் தமிழக சட்டத் துறை அமைச்சருமான சி.வி சண்முகத்திடம் உதவி கேட்டு சென்றபோதும் அவரும் பிரபுவுக்கு உதவவில்லை இதனால் கோபமடைந்தே பிரபு தினகரன் பக்கம் சாய்ந்தார். இப்பொது அந்தர் பல்டி ஆகாசப் பல்டி அடித்து எடப்பாடி பக்கம் சென்று சேர்ந்துவிட்டார். சேர்ந்த கையோடு குமரகுருவால் தனக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது என்று முதல்வரிடம் உத்தரவாதமும் வாங்கியுள்ளார். அவர் என்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் நான் உங்களுடனே இருந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் பிரபு.