போன வருஷத்தைவிட.. கேம்பஸ் இன்டர்வியூக்களில் அதிகம் பேருக்கு வேலை ஆஃபர்! சம்பளமும் கிடுகிடு.. சூப்பர்
சென்னை: கொரோனா தொற்று நோய் காலத்தில் உலகம் முழுக்கவே தொழில் துறை பெரும் பாதிப்பை சந்தித்திருந்தாலும், நமது நாட்டில், கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் கேம்பஸ் நேர்காணலில் பணியாளர்களை தேர்வு செய்யும் எண்ணிக்கையும், சராசரி சம்பளத்தின் அளவும் கடந்த வருடத்தை விட அதிகரித்துள்ளது என்ற நல்ல செய்தி வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெறும் மாணவர்களை அப்படியே தங்கள் நிறுவனத்தில் பணிக்கு சேர்த்துக்கொள்ள பல நிறுவனங்களும் கேம்பஸ்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
கொரோனா தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும், தங்களிடமிருந்து பணிக்கு ஆட்சேர்ப்பு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளன.
மணப்பெண்ணுக்கு பாசிடிவ்.. கவச உடை அணிந்து தாலி கட்டிய மாப்பிள்ளை.. திருமண மண்டபமான கொரோனா மையம்!
ஐஐடி மெட்ராஸ்
ஐ.ஐ.டி மெட்ராஸ் கேம்பஸ் ஆட்சேர்ப்பின் முதல் நாளில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் பதிவாகியுள்ளன. 2019-20 ஆம் ஆண்டின் முதல் அமர்வின் முடிவில் 20 நிறுவனங்கள் 102 வேலை வாய்ப்பை வழங்கின. இந்த வருடம் மொத்தம் 123 வேலை வாய்ப்புகள் 22 நிறுவனங்களால் வழங்கப்பட்டன.
போன வருடத்தை விட அதிகம்
"இந்த ஆண்டு பணிக்கான ஆர்டர்கள் முந்தைய கல்வி ஆண்டுகளைவிட மிக அதிகம்" என்று மெட்ராஸ் ஐ.ஐ.டி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் சி.எஸ்.சங்கர் ராம் தெரிவிக்கிறார். இந்த ஆண்டின் முதல் அமர்வின் பெரிய கம்பெனிகளில், மைக்ரோசாப்ட், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, இஸ்ரோ, அல்போன்சோ மற்றும் குவால்காம் ஆகியவை அடங்கும்.
சம்பளமும் அதிகரிப்பு
ஐ.ஐ.டி ரூர்க்கியில், சி.டி.சி ஊதியம், முந்தைய கல்வி ஆண்டுகளை விட மிக அதிகமாக உள்ளது. முந்தைய அமர்வில் அதிகபட்ச சி.டி.சி ரூ .60 லட்சமாக இருந்தது, இந்த ஆண்டு ரூ .80 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆக்சென்ச்சர் ஜப்பான், ஆக்சிஸ் வங்கி, டிராஃப், ஈடன், ஹைலாப்ஸ், ஐசெர்டிஸ், நவி, ஆயில் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட 107 நிறுவனங்கள் இதுபோல அதிக ஊதியம் வழங்க முன்வந்துள்ளன.
வளரும் துறைகள்
"கொரோனாவையும் மீறி இந்த ஆண்டு நிறுவனங்கள் அதிக ஊதியத்தை வழங்குகின்றன. ஏனெனில் பல துறைகள் வளர்ந்து வருகின்றன, மேலும் அவை வளர முயற்சிக்கின்றன" என்று ஐ.ஐ.டி ரூர்க்கியின் வேலை வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பேராசிரியர் வினய் சர்மா தனது கருத்தை கூறினார்.
சம்பள கணக்கு
ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக்கழக கேம்பஸ் இன்டர்வியூவில் 30 நிறுவனங்கள் பங்கேற்றன, 217 வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன. சிடிசி சம்பள அளவு 64,26,578 முதல் 11,50,000 வரையில் உள்ளது. கடந்த வருடம் இது ரூ.58.21 லட்சம் முதல் 10 லட்சம் என்ற அளவில் இருந்தது.
எந்த துறைக்கு வாய்ப்பு?
தனியார் பொறியியல் கல்லூரிகளிலிருந்து, தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புக்கு ஆளெடுப்பது அதிகரித்துள்ளன. மேலும், கணினி அறிவியல், மென்பொருள் பொறியியல், கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மாணவர்கள் அதிக அளவுக்கு, தேவைப்படுகிறார்கள்.