10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை கடும் சரிவு.. கவலையில் வியாபாரிகள்
சென்னை: 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டையின் விலை சரிந்து தற்போது ஒரு முட்டையின் விலை ரூ.1.95 க்கு விற்பனையாகிறது. இதனால் முட்டை வியாபாரிகள் கடும் மனஉளைச்சலில் உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்களின் நிம்மதி, உயிர் ஆகியவை பறி போய் கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரமும் ஊசலாடி கொண்டிருக்கிறது.
கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மால்கள், பெரிய கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள், கால் டாக்சி டிரைவர்கள் சவாரி இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோழிக் கறியை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வரும் என யாரோ பரப்பிய வதந்தியால் சிக்கன் வியாபாரம் படுத்துவிட்டது. கோழிக் கறி வியாபாரிகள் சங்கம் எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ஒன்றும் வேலைக்காகவில்லை.
கோழிக் கறி விலை குறைப்பு, சிக்கன் 65 இலவசம் உள்ளிட்ட பல்வேறு ஆபர்களை வழங்கியும் மக்கள் கோழிக் கறி என்றாலே அலறி அடித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என குழப்பமான சூழலால் முட்டையையும் மக்கள் புறக்கணிக்க தொடங்கிவிட்டனர்.
இதனால் முட்டையின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை 70 காசுகள் குறைந்து ஒரு முட்டை ரூ 1.95 க்கு விற்பனையாகிறது. அதாவது ரூ 2-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.