EIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான "இஐஏ வரைவு".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்? முழு பின்னணி!
சென்னை: இந்தியா முழுக்க திடீரென மத்திய அரசின் சுற்றுசூழல் வரைவான "Environmental Impact Assessment அல்லது EIA" பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன இஐஏ? இது ஏன் திடீரென இவ்வளவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Recommended Video
பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனியார் நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் ஒரு திட்டத்தை செயல்படுத்த போகிறது என்றால், மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை'' என்ற அறிக்கையை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைதான் இஐஏ என்பது ஆகும். சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1996ல் கொண்டு வரப்பட்ட இந்த நடைமுறை கடைசியாக 2006ல் திருத்தப்பட்டது. தற்போது இதில் மீண்டும் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இஐஏ என்றால் என்ன
ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனத்தை தொடங்கும் முன் மத்திய அரசிடம் இஐஏ அறிக்கையை நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இஐஏ என்றால், அவர்களின் நிறுவனங்கள் குறித்த அடிப்படை விவரங்களை அரசிடம் அளிப்பது. அதாவது எங்கள் தொழிற்சாலை இந்த இடத்தில் அமைய உள்ளது. இத்தனை ஏக்கரில் அமைய இருக்கிறது. இங்கே இத்தனை பேர் வசிக்கிறார்கள். நாங்கள் கழிவுகளை குடிநீரில் வெளியேற்ற மாட்டோம். அருகே இந்த மலை இருக்கிறது. எவ்வளவு தூரத்தில் விவசாய நிலம் இருக்கிறது , என்று இஐஏ அறிக்கையில் அந்த நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும்.
மத்திய அரசு என்ன செய்யும்
இந்த இஐஏ அறிக்கையை பார்த்துவிட்டு, மத்திய அரசு சில விதிகளை தெரிவிக்கும். முதல் விஷயம் அது பெரிய எண்ணெய் எடுக்கும் திட்டம், தொழிற்சாலை அமைக்கும் திட்டம், மின்சாரம் அமைக்கும் திட்டம், மலையை குடையும் குவாரி அமைக்கும் திட்டம் போன்ற திட்டமாக இருக்கும் பட்சத்தில், அதற்கு அரசு அனுமதி மட்டுமின்றி மக்கள் அனுமதியும் வேண்டும். அதேபோல் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் விளக்கம் அளிக்க வேண்டியதும் அவசியம்.
கட்டாயம்
அந்த திட்டம் குறித்து முழுக்க முழுக்க விவரங்களை மக்களிடம் அந்த நிறுவனம் தெரிவிக்கும். இதில் மக்கள் தெரிவிக்கும் கருத்து அதன்பின் அரசு தெரிவிக்கும் கருத்து, இதன் பாதிப்பு என அனைத்தையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும். ஒரு தொழிற்சாலை உங்கள் கிராமத்தில் இருக்கும் வயலில் தொடங்கப்படுமா, இல்லை தொடங்க முடியாதா என்பதை இந்த இஐஏ அறிக்கைதான் முடிவு செய்யும். இஐஏ அறிக்கை ஒரு தொழிற்சாலைக்கு எதிராக இருந்தால் அதை தொடங்க முடியாத நிலை கூட ஏற்படும். இப்போது புரிந்து இருக்கும் இந்த இஐஏ அறிக்கை ஏன் முக்கியம் என்று.
ஏன் சர்ச்சை
சரி இந்த இஐஏ 2006 நன்றாகத்தானே இருக்கிறது. இதில் ஏன் சர்ச்சை என்று நீங்கள் கேட்கலாம். சர்ச்சைக்கு காரணம், இந்த இஐஏ அறிக்கை முறையை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இஐஏ வரைவு அறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது இஐஏவில் சில முக்கியமான விதிகளை நீக்கி, பல வலிமையான விதிகளை மாற்றி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. 2006 சட்டத்தில் மாற்றம் கொண்டு வர உள்ளனர். இதற்காக அடுத்த மாதம் 11ம் தேதி வரை மக்கள் கருத்தை கேட்க உள்ளனர்.
மாற்றம் செய்யப்பட்டது எங்கே
இந்த இஐஏவில் முக்கியமான மாற்றங்களை செய்துள்ளனர். அதன்படி இந்த திட்டத்திற்கு மக்களிடம் கருத்து கேட்பது தொடங்கி, திட்டத்தின் வெளிப்படைத்தன்மை, திட்டத்தின் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிப்பது என்று பல விஷயங்களை இதில் தளர்த்தி இருக்கிறார்கள். தொழிற்சாலையை எளிதாக தொடங்கும் வகையில் இந்த திருத்தங்களை கொண்டு வந்துள்ளனர். என்னென்ன திருத்தங்கள் என்று இனி பார்க்கலாம்.
திருத்தம் ஒன்று எப்படி?
அதன்படி முதல் திருத்தம், இதன் வெளிப்படைத்தன்மை. இஐஏ மூலம் ஒரு தொழிற்சாலை திட்டத்தை "மூலோபாய திட்டம்" (strategic plan) என்று அறிவித்துவிட்டால், அந்த திட்டத்திற்கு எந்த அனுமதியும் தேவை இல்லை.அதாவது இது தேச பாதுகாப்பு தொடர்பானது. அதனால் இதை பற்றி மக்களிடம் தெரிவிக்க முடியாது. மக்களிடம் கருத்து கேட்க முடியாது என்று கூறிவிடலாம். மக்களிடம் கருத்து கேட்காமலே, இஐஏ அறிக்கையில் விவரங்களை தெரிவிக்காமலே ஒரு தொழிற்சாலையை தொடங்க முடியும்.
உதாரணமாக ஒரு எண்ணெய் எடுக்கும் திட்டத்தை மூலோபாய திட்டம் என்று கூறிவிட்டால், அதை பற்றி மக்களிடம் தெரிவிக்காமலே, ஒரு ஊரில் எண்ணெய் எடுக்க நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளிக்க முடியும்.
இரண்டாவது திருத்தம்
அடுத்ததாக ஒரு மின்சார திட்டம் அல்லது நீர் மின்சார திட்டம் 25 மெகாவாட் மின் உற்பத்திக்கு குறைவாக செய்தால், அதற்கு இஐஏ மூலம் மக்கள் அனுமதியை பெற தேவையில்லை. அதாவது ஒரு பெரிய திட்டத்தை சின்ன சின்ன திட்டமாக அறிவித்து, அதை மக்களிடம் அனுமதி பெறாமலே, இஐஏ அறிக்கை மூலம் முறையான அனுமதி வாங்காமலே செயல்படுத்த முடியும்.
மூன்றாவது திருத்தம்
முன்பே இருந்த இஐஏ முறைப்படி ஒரு திட்டத்தின் அறிக்கையை சமர்பித்துவிட்டு, அதன்பின் அனுமதி கிடைத்ததால்தான் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். ஆனால் இனி வரும் நாட்களில் முதலில் திட்டத்தை தொடங்கிவிட்டு, அதன்பின் மத்திய அரசிடம் இஐஏ சமர்ப்பிக்கலாம். அதை மத்திய அரசு ஆராய்ந்துவிட்டு குழு ஒன்றை உருவாக்கி, பொறுமையாக முடிவை எடுக்கும்.
நான்காவது திருத்தம்
நான்காவது திருத்தம் என்று பார்த்தால், ஒரு தொழிற்சாலையின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் விஷயம் ஆகும். பொதுவாக ஒரு தொழிற்சாலையை தொடங்கப்பட்ட பின் அதன் நிலைமை, செயல் திறன் , கழிவு வெளியேற்றம் குறித்த விவரங்களை வருடத்திற்கு இரண்டு முறை வெளியிட வேண்டும். ஆனால் இனி புதிய இஐஏ திருத்தம் மூலம் ஒரு தொழிற்சாலை எப்படி செயல்படுகிறது என்பதை வருடத்திற்கு முறை தெரிவித்தால் போதும். இது பாதுகாப்பு பிரச்சனைக்கு வழி வகுக்க வாய்ப்புள்ளது.
ஐந்தாவது திருத்தம்
அதேபோல் ஐந்தாவது திருத்தம் மிக முக்கியமான சர்ச்சைக்கு வழிவகுத்து இருக்கிறது. இதன்படி 2000-10000 ஏக்கர் நிலத்திற்குள் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டால் அதற்கு இஐஏ அனுமதி தேவை இல்லை. அதேபோல் மக்கள் அனுமதியும் தேவை இல்லை. இஐஏ அறிக்கை சமர்பிக்காமலே 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில், மக்களிடம் கருத்து கேட்காமல் ஒரு தொழிற் சாலையை தொடங்க முடியும். இதுதான் இந்த புதிய இஐஏ வரைவில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்கள் ஆகும்.
யார் எதிர்ப்பு
இதற்கு சுற்றுசூழல் வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக் தெற்காசிய அணைகள் அமைப்பு ( South Asia Network on Dams) எனப்படும் சர்வதேச சுற்றுசூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் மூத்த தலைவர் அம்ருதா பிரதான் இதில் சில புகார்களை வைத்துள்ளார். அதன்படி இந்த புதிய இஐஏ வரைவில் வெளிப்படைத்தன்மை இல்லை. மக்களின் உரிமை இதில் பறிக்கப்படுகிறது.பெரிய திட்டங்களை சிறிய திட்டங்களாக மாற்றி மக்களிடம் அனுமதி வாங்காமல் செயல்படுத்த இருக்கிறார்கள்.
மிக எளிதாகும்
இதனால் விளைநிலங்கள் மிக எளிதாக ஆக்கிரமிக்கப்படும். மக்கள் நிலங்களை இழக்க நேரிடும். மேற்கு தொடர்ச்சி மலை உட்பட பல்வேறு மலை தொடர்கள் மொத்தமாக அக்கிரமிக்கப்படும்,. மொத்தமாக இயற்கை வளங்களை சூறையாடும் பொருட்டு இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது உள்ளது. அரசு உடனே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆதரவு உள்ளது
இதை பொதுமக்கள் பலர் கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளனர். அதே சமயம் இஐஏ வரைவு மூலம் புதிய வேலைவாய்ப்புகள் வரும். பொருளாதார சரிவை ஈடுகட்ட எளிமையான விதிகள் தேவை. முதலீட்டை ஈர்க்க எளிமையான விதிகள் தேவை. அப்போதுதான் தொழில்கள் தொடங்கப்படும், மக்களுக்கு வேலை கிடைக்கும் என்று ஒருசாரார் கூறுகிறார்கள் . பொதுமக்களின் கருத்தை கேட்க ஆகஸ்ட் 11 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.