இன்று பக்ரீத் பண்டிகை.. நாடு முழுக்க கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து.. கலையிழந்த காஷ்மீர்!
நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சென்னை: நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பக்ரீத் பண்டிகைக்கு முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை பக்ரீத். இந்தியாவிலும் இஸ்லாமியர்களால் இந்த பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தமிழில் 'தியாகத் திருநாள்' என்றும், அரபியில் 'ஈத் அல்-அதா' என்றும் அழைப்பது வழக்கம்.இஸ்லாமிய மாத கணக்குப்படி 12வது மாதமான 'துல் ஹஜ்'ஜின் 10வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படும்.
எப்போது
அதன்படி ஏப்ரல் 12ம் தேதியான இன்று இந்தியாவில் நாடு முழுக்க பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் சென்று இஸ்லாமியர்கள் தொழுது, புது ஆடை உடுத்தி பண்டிகையை கொண்டாடினார்கள். அதேபோல் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனுக்கு பலியிட்டு தங்கள் பண்டிகையை கொண்டாடினார்கள்.
யார் வாழ்த்து
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகைக்கு முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் , எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் பக்ரீத் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
காஷ்மீர் நிலை
அதே சமயம் காஷ்மீரில் பக்ரீத் பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. நேற்று மாலை மக்கள் பக்ரீத் பண்டிகைக்காக பொருட்கள் வாங்க மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இன்று அவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு தொடர்ந்து ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளது.
தயார் நிலை
காஷ்மீரில் எப்போதும் ஒரு வாரத்திற்கு முன்பே பக்ரீத் பண்டிகைக்கு மக்கள் விமர்சையாக தயாராவது உண்டு. ஆனால் இந்த முறை அங்கு 144 தடை உத்தரவு காரணமாகவும், ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பதாலும் பக்ரீத் பண்டிகையே மொத்தமாக கலையிழந்து போய் இருக்கிறது.