தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் முன் வைக்கும் 8 ஆலோசனைகள்... உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தல்
சென்னை: வாழ்வாதார உதவி, நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு குறித்து மீண்டும் முன்வைத்திருக்கும் 8 ஆலோசனைகளை முதலமைச்சர் செயல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
விடிய விடிய ஆலோசனைகளைக் கேட்டு ஊடகங்கள் முன் "ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்" என்று வழக்கம்போல் கூறாமல் இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் தூத்துக்குடி போனது ஏன் - ஜெயக்குமார்
ஆபத்து
மார்ச் 24-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தை கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கும்- பரந்து விரிந்த பரிசோதனைகளுக்கும் திட்டமிட்டு முறையாகப் பயன்படுத்தாமல் அலட்சியப்படுத்தி, அங்கொன்றும் இங்கொன்றுமாக மனம்போனபடி செய்த அ.தி.மு.க. அரசு மக்களை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் ஆழ்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பறிகொடுத்தீர்
கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பறிகொடுத்துவிட்டு, இன்றைக்கு மீண்டும் ஊரடங்கு குறித்துப் பரிசீலனை செய்ய முதலமைச்சர் திரு. பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் அடங்கிய வல்லுநர் குழுவைச் சந்தித்துள்ளார். அந்தக் குழு "ஊரடங்கு பரிந்துரைக்கவில்லை" என்றாலும், "பரிசோதனை மிக முக்கியம் அதை அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமே நோய்த் தொற்றைத் தடுக்கும்" என்று மீண்டும் தெளிவாகப் பரிந்துரைத்துள்ளது.
அறிவித்ததோடு சரி
"நோயைக் கண்டறிதல்- பரிசோதனைச் செய்தல்- சிகிச்சை அளித்தல்" ஆகிய அனைத்திலுமே, அ.தி.மு.க. அரசு படுமோசமாகத் திணறி - இன்றைக்கு எத்தனை ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டாலும் பயனில்லை என்ற அபாயகரமான நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. "அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முகக்கவசம் வழங்கப்படும்" என்று ஜூன் 2-ம் தேதி அறிவித்தார் முதலமைச்சர் திரு. பழனிசாமி. இன்று 27 நாட்கள் கடந்து விட்ட நிலையில் எத்தனை நியாய விலைக் கடைகளில்- எவ்வளவு பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது?
மின்னல் போல்
மின் கட்டணம் ஒவ்வொரு குடும்பத்தையும் "மின்னல்" போல் தாக்குகிறது. அதைக் குறைக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அதற்கு மாறாக "மின் கட்டணம் முறையாகத்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது"என்று உயர்நீதிமன்றத்திலேயே வாதிட்டு - அடித்தட்டு மக்களை வாட்டி வதைக்கிறது அ.தி.மு.க. அரசு. ஆகவே ஊரடங்கு குறித்து இன்று ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களுக்குப் பின்வரும் ஆலோசனைகளை மீண்டும் முன்வைக்கிறேன்.
உடனடியாக செயல்படுத்துக
1) வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடித்தட்டு மக்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உயிரூட்டும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5000 ரூபாய் நேரடியாகப் பண உதவி வழங்கிட வேண்டும்.
2) ஊரடங்கு கால மின்கட்டணத்தினை- ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி, உடனடியாகக் குறைத்திட வேண்டும்.
3) நியாயவிலைக் கடைகள் மூலம் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்களை அளித்திட வேண்டும்.
4) பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் மற்றும் பிற வருடங்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து- அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.
5) முன்களப் பணியாளர்களாக விளங்கும் மருத்துவர், செவிலியர், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து கொரோனா போர் வீரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை அளித்திட வேண்டும்.
6) கொரோனா நோய்ப் பாதிப்புக்குள்ளான முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த நிதியை உடனே வழங்கிட வேண்டும்.
7) கொரோனா சோதனை குறித்த விவரங்களை விமான நிலையம் வாரியாக, மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட வாரியாக வழங்கிட வேண்டும்.
8) கொரோனா சமூகப் பரவல் ஆகிவிட்டதா இல்லையா என்பது பற்றி, தெளிவான அறிக்கை பெற, தொற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கொண்ட தனிக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும்.
பல்டி அடித்து
விடிய விடிய ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப 'பல்டி' அடித்துவிட்டு, பின்னர் ஊடகங்கள் முன் "ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்" என்று வழக்கம்போல் கூறாமல், இந்த ஆலோசனைகளைக் காதுகொடுத்துக் கேட்டு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.