சென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை!
சென்னை: இலங்கை தமிழரசு கட்சி பிரதிநிதிகள், வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள் அடங்கிய குழு சென்னையில் தமிழக பாஜக தலைவர்களுடன் நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளது. சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஈழத் தமிழர் தலைவர்கள் தமிழகத்துக்கு தொடர்ந்து வருகை தருகின்றன. இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, தமிழ் எம்.பிக்கலை சந்தித்து டெல்லிக்கு வரவேண்டும் என அழைப்பும் விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஈழத் தமிழர் குழு ஒன்று நேற்று சென்னை வருகை தந்தது. பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தலைவர்களை ஈழத் தமிழர்கள் குழு சந்தித்து பேசியது.
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், திருகோணமலை மாவட்டத் தமிழரசு கட்சித் தலைவர் குகதாஸன், பிரிட்டிஷ் தமிழ் ஃபோரம் ஞாநி, ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் இளங்கோ மற்றும் நிரஞ்சன் நந்தகோபன் ஆகியோர் அடங்கிய குழுவுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எம்.பி. இல, கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு எப்படியான தீர்வை எட்டுவது என விவாதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இது தொடர்பான ஆலோசனைகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது எனவும் இருதரப்பும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.