திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டி வேட்பு மனுவில் 'மறைத்த விஷயம்'.. அமமுக பரபர புகார்
சென்னை: திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டி இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை வேட்பு மனுவில் மறைத்துள்ளதாக அமமுக புகார் அளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்து போஸ் மறைவை அடுத்து அங்கு வரும் மே19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதேபோல் சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் மே19ம் தேதி தான் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்த 4 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று வேட்பு மனு பரிசீலனை நடந்த போது, முனியாண்டியின் வேட்பு மனுவை ஏற்க கூடாது என திடீர் எதிர்ப்பு எழுந்தது.
வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் முனியாண்டியின் பெயர் 2 இடத்தில் இருப்பதாக கூறி திமுக, அமமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் வேட்புமனு ஏற்கப்பட்டது இதையடுத்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் அமமுக செய்தி தொடர்பாளர் முஸ்தபா புகார் அளித்தார்.
டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் கை கோர்க்க வேண்டும்.. தமிழகத்துக்கு அதுதான் நல்லது.. செய்வார்களா?
அந்த புகாரில் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டி, இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை பல கட்ட இழுபறிக்கு பிறகே அதிமுக தலைமை தேர்வு செய்திருந்தது. இப்போது அவர் மீது அமமுக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.