காதுல பூவத்தான் சுத்த வர்றாங்க.. சட்டை பையில கையத்தான் வெக்க வர்றாங்க.. வைரலாகும் பாடல்
காதுல பூவத்தான் சுத்த வர்றாங்க என்ற தேர்தல் விழிப்புணர்வு பாடல் வைரலாகி வருகிறது.
சென்னை: தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் ஆயிரம் தினுசை பார்த்திருக்கிறோம்.. ஆனால் இந்த பிரச்சாரம் வேற லெவலில் உள்ளது!
பாடல் ஒன்றின் மூலம் தேர்தல் விழிப்புணர்வை ஊட்டி இருக்கிறார்கள். இதுதான் இப்போது யூடியூப்பில் பிச்சிக்கொண்டு வைரலாகிறது.
"இந்த பாட்டை நேசிங்க.. அப்பறம் யோசிங்க.." என்று ஒரு மழலையின் குரலுடன் இந்த பாடல் ஆரம்பிக்கிறது!
சுபாஷ் என்பவரது இசையில் குமரேசன் ரங்கசாமி என்பவர், பாடல் வரிகளை எழுதியிக்கிறார். மதன் குமார் என்பவர் கானா ஸ்டைலில் இதனை பாடியிருக்கிறார்.
பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சாமான்ய மக்களின் மனதில் இருந்து வரும் எண்ணங்களே.. ஜனங்களின் குமுறல்களே.. அதனால்தான் இந்த பாடல் வைரலாகிறது. அதிலிருந்து ஒரு சில வரிகள் இப்படி உள்ளது:
காதுல பூவத்தான் சுத்த வர்றாங்க
சட்டை பையில கையத்தான் வெக்க வர்றாங்க
விளையாத பொய்யெல்லாம் விக்க வர்றாங்க
நம்ம கையில மையத்தான் குத்த வர்றாங்க
வறுமை நோயை மறதி பேயை
காசாக்கும் வித்தையெல்லாம் கத்துக்கிட்ட வித்தைக்காரங்க
வெள்ளை சொள்ளை போட்டுக்கிட்டு
கூட்டம் ஒன்னு இப்பதானேதேடி வரும்
வெள்ளந்தியா உன்ன பார்த்து
கும்பிடெல்லாம் நல்லா இப்போ போட்டு நிக்கும்
பாலும் தேனும் ஓடுமுன்னு ஆசையெல்லாம் நல்லா காட்டும் காட்டும்
இப்ப இங்க வாங்கிக்கன்னு காசு எல்லாம் உன்கிட்டவே நீட்டும் நீட்டும்
சத்தியம் பண்ணிதான்.. சம்மதம் சொல்லிதான்.. மீள வழியேதும் கிடையாதுங்க
கையை நீட்டித்தான் காசை வாங்கிட்டால், கேள்வி கேட்கவே முடியாதுங்க.
அப்படி கேட்காத நாளிதே இப்பவும்தான் வந்து..
காதுல பூவத்தான் சுத்த வர்றாங்க"
என்று போய்க் கொண்டே இருக்கிறது அந்த பாடல்! "இந்த பாடல் எந்த ஒரு தனி மனிதரையோ ஒரு நிறுவனத்தையோ குறிக்கும் நோக்கில் எழுதப்பட்டதல்ல" என்று ஒரு டைட்டில் போட்டுவிட்டாலும், யாரை சொல்கிறார்கள், எதற்காக சொல்கிறார்கள், ஏன் சொல்கிறார்கள், என்றெல்லாம் எல்லாருக்குமே நன்றாகவே புரியற மாதிரியே இருக்கிறது.
வரிகள் அனைத்தும் நிஜம் என்பதால் பாடல் ரசிக்கும்படியாகவே செய்கிறது!