மு.க. ஸ்டாலினை முதல்வராக்குவதை இலக்காக கொண்டுதான் தேர்தல் பிரசாரம்.. கனிமொழி எம்பி
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதை இலக்காக கொண்டுதான் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறோம் என திமுக லோக்சபா எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு கனிமொழி எம்பி அளித்த பேட்டி:
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும். வலிமையான எதிர்கட்சிகள் கூட்டணி தேவை. ஒரே ஒரு கட்சியால் மட்டுமே இதை செய்ய முடியும் என நாங்கள் நினைக்கவில்லை. லோக்சபா தேர்தல் முடிவடடைந்து 2 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் தேசிய அளவில் அப்படியான ஒரு கூட்டணி இப்போதைக்கான தேவை இல்லை. அனைத்து கட்சிகளும் மாநில தேர்தல்களில் கவனம் செலுத்தி வருகின்றன. கேரளா, தமிழகம், மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. முன்னெப்போதையும்விட எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருக்கின்றன. தேசிய அளவிலான பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பதில் ஒருங்கிணைந்து செயல்பட்டும் வருகின்றன.
தமிழகத்தில் மதரீதியான அச்சுறுத்தல் இல்லை- மத அடிப்படையில் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியாது: கனிமொழி
பாஜக அரசின் இந்தி திணிப்பு
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒவ்வொருவரும் தமிழரின் கலாசாரம் பற்றி பேசினார்கள். மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு வழிகளில் இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறது. ஆனால் தமிழுக்கான இடத்தை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. தமிழ் மொழிக்கு எந்தவித அச்சுறுத்தலையும் யாரும் ஏற்படுத்திவிட முடியாது. ஆகையால் தமிழ் மொழியைப் பாதுகாப்பது பற்றிய பேச்சுக்கும் இடமில்லை. தமிழர் கலாசாரத்துக்கு அச்சுறுத்தல் எனில் அதை அரசியல் கட்சிகளைத் தாண்டி பாதுகாக்க போராடுவோம். மக்களும் இந்த விஷயத்தில் எதிர்வினையாற்றுவர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக செயல்படாத அரசு இருக்கிறது. ஆகையால் நல்ல அரசாங்கம் அமைக்கப்படுவது தொடர்பாக திமுக பேச வேண்டிய அவசியம் உள்ளது.
திமுக சமூக வலைதளங்கள்
திமுக என்பது தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட கட்சி. மக்களை நேரடியாக சந்திக்கிற கட்சி. சமூக வலைதளங்களை பாஜக எப்படி பயன்ப்படுத்துகிறது என்பதை நாங்களும் அறிந்தே வைத்திருக்கிறோம். சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்களும் அறிந்துதான் வைத்துள்ளோம். இந்த தேர்தலில் தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு என்பது மிக முக்கியமான பிரச்சனை. தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற நம்பிக்கையை மக்களிடத்தில் உருவாக்கி உள்ளது திமுக.
பெண் தலைமை
திமுக எப்போதும் பெண்களுக்கான உரிமைகள், மனித உரிமைகளுக்கு போராடுகிற கட்சி. ஆகையால் பெண் தலைமை என்கிற தனித்த ஒன்றின் தேவை இல்லை. பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டில் திமுக உறுதியாக உள்ளது. ஆனால் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவோம் என உறுதிமொழி அளித்த பாஜக அதை வழங்க மறுப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. தேர்தல் பிரசாரங்களில் பெருந்திரளான பெண்கள் பங்கேற்கின்றனர். ஏனெனில் அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு நிற்கின்றனர். குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் அரசிடம் இருந்து கடனுதவி பெற முடியாமல் உள்ளனர். அவர்கள் முன்னரைப் போல ஆக்டிவ்வாக இயங்கவும் முடியவில்லை. பெண்களின் சுயமுன்னேற்றத்துக்கு இது முட்டுக்கட்டையாக இருப்பதை பார்க்கவும் முடிகிறது.
ஐமு கூட்டணி
தமிழகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது வலிமையாக உள்ளது. நாங்கள் அவ்வப்போது கூட்டணி கட்சி கூட்டங்களை கூட்டி கருத்துகளை பகிர்ந்து கொள்கிறோம். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். தமிழகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். தேசிய அளவில் டெல்லியில் கூட்டணி கட்சி தலைவர்கள் தேவைப்படும் நேரத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்துகிறோம். நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் போது, மசோதாக்களை எதிர்கொள்வது என்பது குறித்து இணைந்து ஆலோசித்தே வந்திருக்கிறோம்.
அடுத்த தலைவர் பேச்சுக்கு இடமே இல்லை
திமுகவில் அடுத்த தலைவர் தொடர்பான பேச்சுக்கான தேவையே எழவில்லை. அனைவருமே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்தான் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். திமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காகவே தேர்தல் பணிகளை மேற்க்கொண்டு வருகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதுதான் எங்களது பிரசாரத்தின் முதன்மையான இலக்கு.
தேர்தல் ஆயுதமாகாது 2ஜி வழக்கு
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நாங்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட்டுள்ளோம். ஒருவர் கூட குற்றவாளிகள் என சொல்லவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு ஆதாரம் கூட இல்லை என தெளிவாகவே கூறி இருக்கிறார். ஆகையால் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை திமுகவுக்கு எதிரான தேர்தல் ஆயுதமாக எப்படி பயன்படுத்த முடியும்?
எம்ஜிஆர்- நடிகர்களின் அரசியல்
ஒருவர் அரசியலுக்கு வரவேண்டுமா? இல்லையா? என்பதை நாம் சொல்ல முடியாது. மக்களிடம் செல்வாக்கு பெற்ற நட்சத்திரங்களாக இருந்தால் எம்ஜிஆரை அரசியலில் உதாரணமாக சொல்கின்றனர். எம்ஜிஆர் ஒரு திரை நட்சத்திரம் மட்டுமல்ல. திராவிட இயக்கத்தில் இருந்து வந்தவர் எம்ஜிஆர். திமுகவில் பல ஆண்டுகாலம் பணியாற்றியவர். அவருக்கான ஒரு ஆதரவு தளம் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருந்தது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் எத்தகைய கடினமான பணிகள் உங்கள் முன் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரே நாள் இரவில் எல்லாமும் மாறிவிடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.