தினகரனின் தொப்பி சின்னம் இனி எந்த கட்சிக்கு தெரியுமா? பாட்டில், ஹெலிகாப்டர்.. அதிர வைக்கும் கட்சிகள்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட உள்ள சில 'முக்கிய' கட்சிகளுக்காக, தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் மே மாதம் நாடு முழுக்க நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவிலேயே இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் அவர்களுக்கு, ஒரே சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சின்னங்கள்
இரட்டை இலை, உதய சூரியன், தாமரை, கை, மாம்பழம் போன்ற சின்னங்கள் உங்களுக்கு நன்கு பழகியிருக்கும். முரசு, பம்பரம், இரட்டை மெழுகுவர்த்தி போன்ற சின்னங்கள் கூட இந்த தலைமுறையினருக்கு நன்கு பரிட்சையமாகிவிட்டது. ஆனால் இப்போது சில புதிய கட்சிகளும் லோக்சபா தேர்தலில் களமிறங்க உள்ளன.
காஸ் ஸ்டவ்
தேசிய பெண்கள் கட்சி (National Women's Party) என்ற கட்சியும் வரும் லோக்சபா தேர்தலில் உங்களின் பொன்னான வாக்குகளை கேட்டு வரப்போகிறது. இந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னம், காஸ் ஸ்டவ். இதேபோல பிரஜா சாந்தி என்ற கட்சிக்கு ஹெலிகாப்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாட்டில் சின்னம்
பிரஜா சாந்தி கட்சியைபோலவே அதிகம் அறிமுகம் இல்லாத கட்சி, அனைத்திந்திய மக்கள் நல்வாழ்வு கட்சி. இதற்கு பாட்டில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாம். போடுங்கம்மா ஓட்டு.. பாட்டில் சின்னத்தை பார்த்து.. என்ற கோஷம் வரும் தேர்தலில், உங்களுக்கு புதிதாக இருக்க கூடும்.
தொப்பி சின்னம்
இன்னொரு சின்னம் முக்கியமானது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக டிடிவி தினகரன் போட்டியிட களமிறங்கியபோது அவருக்கு ஒதுக்கினார்களே, அதே தொப்பிதான். ஆனால், இப்போது அனைத்திந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு அது ஒதுக்கப்பட்டுள்ளது. தொப்பி ராசி, இந்த கட்சிக்கும் கைகொடுக்குமா என்பதை லோக்சபா தேர்தல் முடிவில் பார்த்துவிடலாம்.