பாஜக தேர்தல் அறிக்கையை பார்த்தீர்களா… சிந்திக்க வேண்டாமா… கி.வீரமணி கொந்தளிப்பு
சென்னை: மத பிரச்சினையை தேர்தலில் முன்வைப்பது சரிதானா? என்று பாஜக தேர்தல் அறிக்கை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பெரும்பாலும் கடந்த 2014 ஆம் ஆண்டு அறிக்கையின் நகலகாவே இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, அந்த பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகளின் முதுகில் குத்துகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் உடைந்து அழுத அன்புமணி.. ஐயா ஐயா என்று கோஷமிட்ட மக்கள்.. என்ன நடந்தது?
பாஜகவோடு கூட்டணி சேர்ந்த தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அதனை கண்டு கொள்ளவே இல்லை.ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறியிருக்கிறார்கள், சபரிமலை பிரச்சனை பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இப்படி மத பிரச்சினையை தேர்தலில் முன்வைப்பது சரிதானா? என்பதை தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும்.
பாஜகவுக்கு உரித்தான சிறுபான்மையினர் மீதான சீண்டலும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது அந்த கட்சிக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்பதற்கான தன்னிலை விளக்கம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து, இந்து மத கடவுளர்களை இழிவுபடுத்துவதையே வீரமணி வேலையாகக் கொண்டுள்ளார் என குற்றச் சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து, கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது உண்மை என்றால், அது தவறுதான் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.