தேர்தல் திருவிழா.. டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் லீவு
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத் தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதனையொட்டி, தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.
திருவிழாக் காலங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை போல, ஆட்டம், பாட்டத்திற்காக தேர்தல் திருவிழாவின் போதும், மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
எனவே, பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்தல் நடக்கும் நாளுக்கு, 2 நாட்கள் முன்பாகவே, டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளில் கடைகள் மூடப்பட உள்ளன.
பார்களை மூட உத்தரவு
தமிழ்நாட்டில் மிகவும் சுதந்திரமான, மிக அமைதியான முறையில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற வகையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களில், மதுபான விற்பனை செய்ய தடை விதித்தும், பார்களை மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
நான்கு நாட்களுக்கு மூடல்
இந்த உத்தரவுக்கு ஏற்ற வகையில், தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு ஏற்ப, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், அதோடு இணைக்கப்பட்டுள்ள பார்களும் வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களும், வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே மாதம் 23ம் தேதியும் மூடப்படும் என்று கூறியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்
வாக்குப்பதிவு முடியும் வரை உள்ள 48 மணி நேரங்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்பட வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுபானக்கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.
வேண்டுகோள்
இதே போல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபானம் உற்பத்தி செய்யவோ, விற்கவோ மற்றும் எடுத்துச் செல்லவும் கூடாது என்று தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிபக் கழகம், இந்தியாவில் வெளிநாட்டு மதுபானம் பீர் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.