அடப்பாவமே.. இது என்ன நூதன திட்டம்.. தருமபுரி அருகே அரசு பஸ்சில் பிடிபட்ட ரூ.3.47 கோடி
Recommended Video
சென்னை: திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற அரசு பேருந்தில், கேட்பாரற்று கிடந்த ரூ.3.47 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வருகிற 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு, காலியாக இருக்கும் தருமபுரி மாவட்டத்தின், அரூர் உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதையடுத்து, தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் இதுவரையில் கணக்கில் காட்டப்படாத கோடிக் கணக்கான பணம் மற்றும் பொருட்கள் சிக்கி உள்ளன.
7 பைகள்
இந்த நிலையில், அரூர் அருகே நரிப்பள்ளியை அடுத்த பையர்நாயக்கன்பட்டி கூட்ரோட்டில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை சோதனை செய்தனர். அப்போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பேருந்தின் இருக்கைகளுக்கு அடியில் 7 பைகளில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 110 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு எப்படி நடக்கிறது பணப்பட்டுவாடா.. அதிர வைக்கும் உண்மைகள்
சட்டசபை இடைத் தேர்தல்
அரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முக்கிய தலைகள் மோதும் தர்மபுரி.. இந்த ஒரு தொகுதிக்கு இத்தனை சிறப்பம்சமா?
பஸ் ஏன்
கார்கள் போன்ற சொந்த வாகனங்களில் பணத்தை கொண்டு சென்றால், பறக்கும்படையிடம் எளிதாக சிக்க நேரிடும். எனவே பஸ் மூலமாக கொண்டு செல்லும் பாணி கையில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை பணம் சிக்கினாலும், அது யாருடையது என கண்டுபிடிக்க முடியாது. பணத்தை கொண்டு செல்பவர் ஏதாவது ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு, பயணியோடு பயணியாக எஸ்கேப் ஆகிவிட வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பஸ் டிரைவர் உடந்தை?
ஆனால் அரூர் பஸ்சில் கண்டுபிடிக்கப்பட்ட பணத்தை பஸ் டிரைவர் செல்வராஜ்தான், பஸ்சில் வைத்ததாக சில தகவல்கள் கிடைத்துள்ளதால் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.