இஸ்லாமியர்களுடன் முக ஸ்டாலின் நிகழ்ச்சி நடத்திய ஆம்பூர் மண்டபத்திற்கு சீல்.. ஐகோர்ட்டில் முறையீடு
சென்னை: மு.க.ஸ்டாலின் இஸ்லாமிய அமைப்புகளுடன் நிகழ்ச்சி நடத்திய ஆம்பூர் மண்டபத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதின்றத்தில் முறையிட்டுள்ளார்கள். இதை மனுவாக தாக்கல் செய்தால் இன்று மதியம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேலூரில் வரும் திங்கள்கிழமை ஆகஸ்ட் 5ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
கதிர் ஆனந்த்தை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில நாள்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று ஆம்பூர் பகுதியில் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இஸ்லாமிய அமைப்புடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடந்ததாக புகார் வந்தததையடுத்து வட்டாட்சியர் சுஜாதா தலைமையில் அதிகாரிகள் மண்டபத்திற்கு சீல் வைத்தனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி கூட்டம் நடத்தியதாக வட்டாட்சியர் சுஜாதா புகாரின் பேரில் ஆம்பூர் காவல்நிலையத்தில் ஸ்டாலின் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் தனியார் மண்டப உரிமையாளர் ஜகிரியா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மண்டபத்தினர் தரப்பில் முறையிடப்பட்டது. இதை மனுவாக தாக்கல் செய்தால் இன்று மதியம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.