ராமதாஸையும், பாமகவையும் வன்னியர் சமுதாயம் கை விட்டு விட்டதா..தோல்வி தரும் பாடம்
பெரும்பாலான தொகுதிகளில் பாமகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: பாமகவின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் கணிசமாக சரிந்து போயிருப்பது கண் கூடாக தெரிகிறது.
கடந்த முறை பாமக 5.3 சதவீத வாக்குகளை அதாவது பாஜகவைவிட அதிகம் பெற்றிருந்தது. போனமுறை சட்டசபைத் தேர்தலில் 85 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைய முக்கிய காரணமே பாமகதான். 27 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்பை பறித்த பாமக, பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடிக்க முடிந்தது.
அந்த வகையில் பார்க்கும்போது, இப்போதும் பாமகவின் பங்களிப்பு பெருமளவில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் வரை, வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை விழுப்புரத்திலிருந்து கடலூர் வரையிலான தொகுதிகளில் தனது செல்வாக்கை இந்த 3 ஆண்டுகளில் பலப்படுத்தி வந்திருக்கிறது பாமக. அதனால் வட மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலெழுந்தது.
திருச்சியை திணறடித்த நாம் தமிழர், மநீம.. கூட சேர்ந்து வெளுத்த அமமுக.. அதிர்ச்சியில் "பெருசுகள்"
சபரீசன்
பாமகவை உள்ளிழுக்க திமுக முயன்றது. இதில் ஆரம்பத்தில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், துரைமுருகன் ஆர்வமாக இருந்தார். ஆனால் இது சம்பந்தமாக பேசி முடிக்க சபரீசனிடம்தான் பொறுப்பு தரப்பட்டது. பேச்சுவார்த்தை நடத்த திமுகவில் வேறு யாருமே கிடைக்கவில்லையா என்று ராமதாஸே கேட்டுவிட்டாராம். சபரீசனின் அணுகுமுறையால் பாமக திமுக கூட்டணிக்குள் வர முடியாமல் போய்விட்டது. இது பாமகவுக்கு முதல் சறுக்கல்!
தேவேந்திர குல வேளாளர்
எனினும், வாக்கு வங்கிக் கணக்கு அடிப்படையில் பாமகவுக்கு சீட் கொடுத்து அசத்தியது அதிமுக. எதிர்பாராத வகையில் 7+1 என்று சீட் கிடைத்ததும் பாமக சுறுசுறுப்பாக வேலை பார்த்தது. தைலாபுரம் தோட்டத்தில் விருந்துடன் கூடிய சகல விஷயங்களையும் பேசி முடித்து களத்தில் இறங்கியது. வேட்பாளர்கள் தேர்வில் விழுப்புரத்தில் வடிவேல் ராவணனை வேட்பாளராக அறிவித்தது. இதற்கு காரணம், இவரது சொந்த மாவட்டம் தேனி, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். அதனால் இவரது வெற்றியை வைத்து தென்மாவட்டத்தில் பாமக செல்வாக்கை விரிவுபடுத்தலாம் என்று கணக்கு போட்டது.
திண்டுக்கல்
ஆனால் சிக்கல் எந்த தொகுதி என்பதில்தான் ஏற்பட ஆரம்பித்தது. பாமக கேட்ட தொகுதிகள் முழுமையாக கிடைக்கவில்லை. இதற்கு காரணம், அதிமுக கோட்டையான திண்டுக்கல் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. வெற்றி பெறாத தொகுதிகள் ஒதுக்கப்பட்டது பாமகவுக்கு இரண்டாவது சறுக்கல்!
அடுத்த சறுக்கல்
அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் பிரசார கூட்டத்தில் பேசும்போது, ‘தேர்தல் பூத்-ல் நாம்தான் இருப்போம், புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன், நாம் தான் இருப்போம்....' என கூறினர். இதையடுத்து அன்புமணி மீது திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையே தங்கள் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் ஊதி பெரிசாக்கியது. இது பாமகவுக்கு 3-வது சறுக்கல்!
கூட்டணி
இது மட்டுமில்லை, மத்திய, மாநில அரசுகளின் ஒவ்வொரு சம்பவத்தையும் விலாவரி அறிக்கைகளாக வெளியிட்டு கண்டித்து வந்தார் ராமதாஸ். இந்த அறிக்கைகளை படித்தபின்பு டாக்டருக்கு ஏற்பட்ட அதே கோபம், ஆத்திரம்தான் தொண்டர்களுக்கும் அதிமுக-பாஜக அரசு மீது ஏற்பட்டு வந்தது. ஆனால் திடுதிப்பென்று விமர்சித்த கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டால், தொண்டர்களின் மனநிலையும் உடனடியாக ஒரே நாளில் மாறும் என்றும், அதிமுக-பாஜகவை மனதளவில் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் டாக்டர் ராமதாஸ் எப்படி எதிர்பார்த்தார் என தெரியவில்ல. இது பாமகவுக்கு 4-வது சறுக்கல்!
வேல்முருகன்
இதை தவிர, காடுவெட்டி குரு குடும்பத்தை கண்டுகொள்ளாமல் விட்டது மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால் இந்த இடத்தை பக்காவாக ஸ்கோர் செய்துவிட்டார் திமுகவுக்கு ஆதரவு தந்த வேல்முருகன்!
இன்றைய ரிசல்ட்
எனினும் வன்னிய சமுதாயம் பாமகவை கைவிடாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்கள் தெளிவாக உள்ளார்கள். யார் நிறைய சீட் தருவார்களோ, அவர்களுடன்தான் ராமதாஸ் கூட்டணி வைப்பார் என்பது தெரிந்த சமாச்சாரம்தான் என்றாலும், இந்த முறை பாமக தரப்பை வன்னிய சமுதாய மக்களே கைவிட்டு விட்டார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது இன்றைய ரிசல்ட்!