வாக்களிக்க 3 லட்சம் பேரு ஊருக்கு கிளாம்பியாச்சு... பஸ் கட்டணத்தை கேட்டால் தலைசுத்துது
Recommended Video
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து, 3 லட்சம் பேர், அரசு பேருந்துகளில், சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனை பயன்படுத்தி 3 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனநாயகத் திருவிழா என கூறப்படும் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு நேற்றும், இன்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து நேற்று 650 பேருந்துகளும், இன்று 1500 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சொந்த ஊருக்கு கிளாம்பியாச்சு
தமிழகத்தில், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், நாளை நடைபெறுகிறது. இதற்காக, சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து, இரண்டு நாட்களாக, ஏராளமானோர், குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு செல்லத் துவங்கியுள்ளனர்.
கூட்ட நெரிசல்
இதேபோன்று, தொழில் நகரமான திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்காளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் கூடுவதால் நெரிசலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
3 லட்சம் பேர்
பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் போல், பொதுமக்கள் ஓட்டளிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.சென்னையில் இருந்து, வழக்கமாக, 2,275 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று, கூடுதலாக,650 பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று, கூடுதலாக, 1,500 பஸ்கள் இயக்கப்படும். அதேபோல, வெளியூர்களிலும், பயணியரின் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கட்டண கொள்ளை
வாக்களிப்பதற்காக, சொந்த ஊர் திரும்புவதற்காக, ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதே போன்று, அரசு பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி, குறிப்பாக, தென்மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில், 1,500 க்கு வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. நேற்று முதல், கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூர் உள்ளிட்ட பிற நகர்களில் இருந்தும் வரும் ஆம்னி பஸ்களில் கட்டணம் தாறுமாறாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.