மக்களே கவனம்.. ஊரகப் பகுதிகளில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதி
சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் 388 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தை விதி உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது.
இதனால் அரசின் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் உள்ளிட்ட எந்த சலுகைகளையும் கிராமப்புற மக்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற ஒப்புதல் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நகர்புற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது...? விரைவில் தேதி அறிவிப்பு
தேர்தல் நடத்தை விதி
ஊரக பகுதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் அதற்கான தேதிகளையும் இன்று காலை அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதி உடனடியாக கிராமப்புறங்களில் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் தேர்தல் அலுவலர்கள் அனுமதியின்றி பிரச்சாரம் உள்ளிட்ட செயல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக் கூடாது.
கிராமத்தலைவர்
தமிழகத்தில் 388 ஊராட்சி ஒன்றியத்தலைவர், 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 12,524 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தல் டிச.27, 30 என இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை கண்காணிக்க மாவட்டத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளார்கள்.
வேட்பாளர்
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் ஒரு வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் வீட்டுக்கு முன் நின்று பிரச்சாரம் செய்யக்கூடாது, பணமோ, பரிசுப்பொருட்களோ கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் நடத்தை விதியில் கூறப்பட்டுள்ளன.
கவனம் தேவை
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஜாதி, மதம், இனம் குறித்து விமர்சிக்கக் கூடாது, பரப்புரை செய்வதற்கும் வரம்பு நிர்ணயம் என பல்வேறு ஷரத்துகள் தேர்தல் நடத்தை விதிகளில் உள்ளன. நடக்கவிருக்கும் தேர்தல் கிராமப்புறங்களில் என்பதால் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை ஒருவர் ஜாதி மதம் குறித்து விமர்சிக்கும் நிகழ்வுகள் நடக்கும் என்பதால், அதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்துகிறது.