ரூ.635 கோடி முதலீடு.. ஒசூர் நகரில் அமைகிறது எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை.. 4300 பேருக்கு வேலை வாய்ப்பு
சென்னை: ஒசூரில் ரூ. 635 கோடி மதிப்பில் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது, இதன் மூலம் 4,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று, சட்டசபையில், அமைச்சர் எம். சி. சம்பத் இன்ற தெரிவித்தார்.
சட்டசபையில், ஓசூர் தொகுதி எம்எல்ஏ சத்யா, இன்று தனது தொகுதியின் தொழில் வளர்ச்சி குறித்து எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் சம்பத் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எலக்ட்ரிக் பைக் நிறுவனம் ஒன்று, ஓசூரில், ரூ. 635 கோடி முதலீட்டில் தொழிற்சாலை தொடங்கவுள்ளது. இந்த நிறுவனம், பெங்களூரை சேர்ந்தது.
கடந்த 2019ம் ஆண்டில் நடைப்பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இதற்கான புரிந்துணர்வு செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் 4300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சென்னைக்கு அடுத்தபடியாக ஓசூர் நகரில் தொழில் தொடங்க அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதை அறிந்துதான், முதலீட்டாளர்களுக்கு அரசு அரவணைப்புடன் செயல்படுகிறது.
ஒசூர் நகரில் செயல்படும் சிப்காட்-2 கேம்பசில், கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 5 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 4000 ஏக்கரில் பரப்பளவில் பி6 இஞ்சின்கள் தயாரிக்ககூடிய வகையில் எலக்ட்ரிக் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.