இனி மேல் ஸ்மார்ட் கார்டு தான்... நகரங்களை அலங்கரிக்க வருகிறது மின்சார பேருந்துகள்
சென்னை: ஓரிரு வாரத்தில் சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை விவாத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், சென்னையில் மின்சார பேருந்து திட்டம் எப்போது துவங்கப்படும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மின்சார பேருந்துகளின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் வாங்க இருப்பதாக கூறினார்.
மேலும், சென்னையில் 80 பேருந்துகளும், கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் தலா 10 மின்சார பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. ஓரிரு வாரங்களில் சென்னையில் மின்சார பேருந்துகள் இயங்கும் என்றும், அதற்கான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தேவைக்கு ஏற்ப வழிதடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கிடும் வகையில், 1,903 புதிய பேருந்துகள் வாங்க, 668 கோடியே 69 லட்ச ரூபாய் நிதியை வழங்க, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகர் போக்குவரத்து கழகம் இரண்டிலும் பயணம் செய்ய கூடிய வகையில் பொதுவான ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19ம் ஆண்டில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் இயக்கிய சிறப்பு பேருந்துகளினால் 210.77கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக போக்குவரத்து துறை கொள்கைவிளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.