சென்னை சாந்தி காலனியில் மருத்துவமனையில் சுற்றுச்சுவர் விழுந்தது.. மின்தடையால் நோயாளிகள் இடமாற்றம்
சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சுற்றுச்சுவர் இடிந்து டிரான்ஸ்பார்மர் மீது விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த உள்நோயாளிகள் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ளது சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன். அப்பகுதியில் பிரபலமான மருத்துவமனை இதுவாகும். இங்கு தீவிர சிகிச்சை பிரிவு, அதி தீவிர சிகிச்சை பிரிவு உள்பட அனைத்து பிரிவுகளும் உள்ளன.
இங்கு அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரு கட்டடங்களாக உள்ள இந்த மருத்துவமனையில் ஒரு இடத்தில் புறநோயாளிகளுக்கான பிரிவுகளும், இன்னொரு இடத்தில் உள்நோயாளிகளுக்கான பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் உள்நோயாளிகள் இருக்கும் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு ஏற்பட்டது.
சென்னை-பெங்களூர் தொழில்வழித்தட திட்டம் சேலம், கோவை வழியாக கொச்சிவரை விரிவாக்கம்! முதலீடுகள் குவியும்
இதையடுத்து மின் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் மின் தடை ஏற்பட்டதை அடுத்து ஐசியூவில் இருந்த 12 நோயாளிகள் அருகில் உள்ள இடங்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் இடமாற்றப்பட்டனர். மேலும் வார்டுகளில் இருந்த 50 நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக தீவிபத்தோ, எந்த அசம்பாவித சம்பவமோ ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் டிரான்ஸ்பார்மரை சுற்றியுள்ள நீரை அகற்றும் பணியில் அதிகாலை 3 மணி முதல் ஈடுபட்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.