இந்த முறை இரு மடங்கு மின் கட்டணம்.. விழி பிதுங்கும் மக்கள்.. மின்வாரியம் மீது புகார்
சென்னை: வழக்கமாக செலுத்தும் மின் கட்டணம் போல் இல்லாமல் இந்தமுறை பலருக்கு இருமடங்கு கட்டணம் வந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே லாக்டவுனால் பணம் இல்லாமல் தவிக்கும் நிலையில் மின் கட்டணம் இருமடங்கு ஆகியுள்ளதால் மக்கள் என்னசெய்வது என்று தவித்து வருகிறார்கள்.
கொரோனா பரவல் காரணமாக மின்பயன்பாடு கணக்கெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு மடங்கு கட்டணத்தை மக்கள் சுமக்கும் நிலைக்கு தள்ளபபட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.இதற்கு என்ன காரணம் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகம் முழுவதும் 2 கோடி வீட்டு மின் இணைப்புகள், 36லட்சம் வணிக இணைப்புகள், 11 லட்சம் குடிசைகள் என மொத்தம் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. அரசு வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் இலவசமாக வழங்குகிறது. அத்துடன் 500 யூனிட் வரை மானிய விலையில் மின்சாரம் வழங்குகிறது.
குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்... முதலமைச்சர் அறிவிப்பு
பாதி அளவு
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மின் கணக்கீடு நடக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பழைய மின் கட்டணத்தையே செலுத்தினர். இந்நிலையில் ஜுன் மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்தும் போது மார்ச் ஏப்ரல், மே, ஜுன் ஆகிய நான்கு மாதங்களுக்கு மொத்தமாக மின் கணக்கீடு செய்யப்படும். அப்போது கிடைக்கும் மொத்த யூனிட்டில் பாதியான அளவு எடுக்கப்பட்டு பிறகு அது மொத்த யூனிட்டிற்கான தொகையாக மாற்றம் செய்யப்படும் இதில் இருந்து ஏப்ரல் மாதத்திற்கான தொகை கழிக்கப்படும்.அதன்பிறகான இறுதி தொகையை மின்நுகர்வோர்கள் செலுத்த வேண்டும் என்று மின் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி கணக்கீடு
அதாவது , ‘பிப்ரவரி மாதம், மின் நுகர்வோர் ஒருவரின் மின்நுகர்வு 200 யூனிட்டாக இருக்கும் பட்சத்தில், அவர் வாரியத்திற்கு மின் மற்றும் நிலைக் கட்டணத் தொகையுடன் சேர்த்து 170 செலுத்தியிருப்பார். பிறகு ஊரடங்கு காரணமாக முந்தைய மாத மின் கட்டணத்தை செலுத்த வாரியம் அறிவுறுத்தியது. இதன்காரணமாக ஏப்ரல் மாத மின் கட்டணமாக சம்மந்தப்பட்ட மின்நுகர்வோர், முந்தைய கட்டணமான 170யையே செலுத்தியிருப்பார்கள்.
மின் கட்டணம் எவ்வளவு
தொடர்ந்து ஜூன் மாதம் கணக்கெடுக்கும் போது 4 மாதங்களுக்கு அளவீடு செய்யப்படும். அப்போது மொத்த மின் நுகர்வு 430 யூனிட்டாக இருக்கும் பட்சத்தில், அதில் பாதியான 215 யூனிட்டுக்கு தொகை கணக்கிடப்படும். பிறகு அது 430 யூனிட்டுக்கான கட்டணமாக மாற்றியமைக்கப்படும். இதன்படி மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான மின் கட்டணம் 550 ஆக இருக்கும். சம்மந்தப்பட்ட நுகர்வோர் ஏற்கனவே 170 செலுத்தியிருக்கிறார். இதனால் 550ல் இருந்து 170 கழிக்கப்பட்டு விடும். பிறகு நுகர்வோர் 380யை கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த முறையில், மின் பயன்பாட்டுக்கு ஏற்ப, செலுத்த வேண்டிய தொகை கணக்கீடு செய்யப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்கள் கவலை
ஆனால் இப்படி செலுத்தினால் இரு மடங்கு கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டியது வரும் என்று புகார்கள் எழுந்துள்ளது. எனவே இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது ஒருபுறம் எனில் தமிழகத்திற்கு சென்னை தவிர பிற நகரங்களில் மே மாதத்திற்கான மின் கட்டணம் பல இடங்களில் இரு மடங்காக வந்துள்ளது. ஊரடங்கில் மக்கள் வீடுகளுக்குள் இருந்ததால் அதிகரித்து இருப்பது ஒரு காரணம் என்றால், மின் கணக்கீடு செய்ய ஊழியர்கள் தாமதமாக வந்ததும் ஒரு காரணம் என்று சில ஊர்களில் புகார்கள் எழுந்துள்ளது. இதனால் 500 ரூபாய் கட்டி வந்தவர்கள் 1000 கட்டும் நிலை வந்துள்ளதாகவும், 1000 கட்டியவர்கள் 2000 கட்ட வேண்டிய நிலைவந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே மின் கட்டணம் செலுத்த ஜுன் 6ம் தேதி வரை அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது.