வீணாகும் கோயம்பேடு காய்கறிகள் மூலம் மின்சாரம்.. ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.. தமிழக அரசின் பலே திட்டம்
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை கொண்டு மின்சாரம் தயாரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்று பொருட்களை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்கும், பல்வேறு மாற்று பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாறுபாடு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக, ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களுக்கான தேசிய கண்காட்சி மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கம் சென்னையில் தொடங்கியுள்ளது. இத்தகைய கண்காட்சி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் எம்ஜிஆர், ஜெ. படங்கள்.. முதல்வரின் பெருந்தன்மை- அமைச்சர் மெய்யநாதன்
பிளாஸ்டிக்கிற்கான மாற்று
இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருட்களாக வாழை இலை பொருட்கள், நார், அரிசி தவிடு, அரிசி மட்டை, விவசாய பொருட்கள், பாக்கு இலை பொருட்கள், தேங்காய் மட்டை பொருட்கள், தென்னை நார் பொருட்கள், மட்பாண்ட பொருட்கள், பனை பொருட்கள், சணல் பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தும் வகையில் 150 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் மெய்யநாதன்
இதனை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகவே தமிழக அரசு சார்பில் மஞ்சப்பை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஓரளவு வரவேற்பும் இருந்து வருகிறது. மஞ்சப்பை பயன்படுத்துவோர் அனைவரும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர்கள். மக்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், பிளாஸ்டிக்கில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
வீணாகும் காய்கறிகள் மூலம் மின்சாரம்
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்று பொருட்கள் என்ன பயன்படுத்துகிறோம் என்பது குறித்து கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், குப்பைகள் தேங்குவதை தடுக்கக் கூடிய வகையில், சுற்றுசூழல் மற்றும் காலந்லை மாற்றத்துறை சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை கொண்டு உரம், மின்சாரம் தயாரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பால் பாக்கெட்டுகள் மறுசுழற்ச்சி
அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 25 பள்ளிகளை தேர்வு பசுமை பள்ளிகளாக மாற்றி, தேவையான மின்சாரத்தை சூர்ய ஒளி மூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. முக்கியமாக கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆவின் பால் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து மக்கும் தன்மையுடைய பைகளை பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும். நீர்நிலைகள், ஏரிகள், கடல், குளங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற திட்டமிட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.