என் உயிர் பிரிந்தால்.. 15 ஆண்டுக்கு முன்பே கடைசி ஆசையை கூறிய எஸ்பிபி.. எல்லாபுரம் கவுன்சிலர் தகவல்
சென்னை: பண்ணை வீட்டில்தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என 15 ஆண்டுகளுக்கு முன்பே தனது விருப்பத்தை எஸ்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்திருந்ததாக எல்லாபுரம் கவுன்சிலர் ஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஜி சரவணன் கூறுகையில், இன்று எஸ்பிபி மறைவுச் செய்தியை கேட்டு தாமரைப்பாக்கம் தொகுதி மக்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் இருக்கிறோம்.
அவர் சமூக அக்கறை கொண்ட நபர். இந்த பகுதியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவிகளை செய்துள்ளார். கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர் வழங்கியுள்ளார்.
"கர்நாடகாவில் பிறக்க விரும்பியவர் எஸ்பிபி..ராஜ்குமாரின் ஆன்மா" கர்நாடக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
எஸ்பிபி சரண்
அது போல் இங்குள்ள பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் எஸ்பிபியும் எஸ்பிபி சரணும் சேர்ந்து செய்துள்ளார்கள். இந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பண்ணை வீட்டில் வந்து சென்று வசித்தும் இருக்கிறார்.
15 ஆண்டுகள்
இந்த பண்ணை வீட்டில் அவருடைய பாட்டி, அம்மா, மாமியார் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த பண்ணை வீட்டில் அவர் இருக்கும் போது, "நான் இறந்துவிட்டால் என்னை எனது பண்ணை வீட்டிலேயே அடக்கம் செய்து மணி மண்டபம் கட்ட வேண்டும் என 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது விருப்பத்தை கூறியிருக்கிறார்.
ஆசை
தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற இந்த பண்ணை வீட்டில் நாளை எஸ்பிபியின் இறுதிச் சடங்குகளை செய்வதாக சரண் அறிவித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் பகுதியில் பாடும் நிலா எஸ்பிபியின் மணி மண்டபம் இருப்பது எங்கள் தொகுதிக்கும் எங்கள் தொகுதி மக்களுக்கும் எல்லாபுரம் கவுன்சிலராகிய எனக்கும் மிகவும் பெருமையாக இருக்கிறது.
பண்ணை வீடு
சிவன் என்றால் எஸ்பிபிக்கு பிரியம். இந்த பண்ணை வீடும் சிவன் கோயிலுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது. சிவனுக்காக நிறைய பாடல்களை பாடிய எஸ்பிபி தற்போது சிவனுக்கு அருகே நல்லடக்கம் செய்கிறார்கள். அஇஅதிமுக சார்பில் அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றார் சரவணன்.