ஊழியர்கள் நல்லா இருந்தா தான் தொழிலில் வளர்ச்சி காட்ட முடியும்.. சரவணபவன் ராஜகோபாலின் பாலிசி
Recommended Video
சென்னை: பெண்ணாசை கண்ணை மறைக்க கூடவே ஜோதிடமும் உசுப்பி விட, பல்லாண்டுகளாக ஊர் தூற்றும் மனிதராக வாழ்ந்து மறைந்துள்ளார் சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால்.
சாதாரண கிராமத்தில் பிறந்து டீக்கடையில் வேலை பார்த்து, தரையை துடைத்து என பல போராட்டங்களை கடந்து தான் மிகப்பெரிய ஓட்டல் அதிபரானார் ராஜகோபால். ஏற்கனவே 2 மனைவிகள் இருந்த நிலையில், ஆஸ்தான ஜோதிடர்களின் தவறான வழிகாட்டுதலால் கடந்த 20 வருடங்களாக சீரழிந்து நின்றது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.
என்ன தான் ஜோதிடர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஜீவஜோதியை மூன்றாவது தாரமாக திருமணம் செய்ய ஆசைப்பட்டு, அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை போட்டுத் தள்ளும் அளவிற்கா ஒரு தொழிலதிபரின் மூளை மழுங்கியிருக்கும் என தூற்றாதவர்களே இல்லை.
ராஜகோபாலை ஊரே தூற்றினாலும் சரவணபவன் ஊழியர்களின் பதில் கண்ணீர் தான். ஏனெனில் தனது உணவக ஊழியர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டவராகவே துவக்கம் முதலே இருந்து வந்துள்ளார் ராஜகோபால்.
சமீபத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்ட போது கூட, அவரது உறவினர்களை விட ஊழியர்களே அதிகளவில் மருத்துவமனை வளாகத்தில் குழுமியிருந்தது இதற்கு சாட்சி என கூறலாம்.
ருசியை காட்டிலும் பசி தீர சாப்பிட வேண்டும் என்பதே அத்தியாவசியமாக இருந்தது ராஜகோபால் ஓட்டல் துவங்கிய 1970-ம் ஆண்டுகளில். நல்ல தரமான உணவு பதார்த்தங்களை வழங்குவதோடு மட்டுமின்றி, ஊழியர்களின் வேலை சூழலை நல்ல நிலையில் வைத்திருப்பதும் சரவணபவனின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
ஜோதிடத்தால் புத்தி மாறி கொலையாளி.. ஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால்
சாப்பாடு தட்டின் மீது வாழை இலை வைக்கும் முறையை ராஜகோபால் பின்பற்ற காரணம், வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, தட்டை கழுவும் ஊழியர்களுக்கு வேலை எளிதாகும் என்பதற்காக தான் என அவரை அறிந்தவர்கள் கூறியுள்ளனர். இதுமட்டுமின்றி ஊழியர்களுக்கு முதலில் தேவையான வேலை உறுதியை வழங்கி விடுவாராம் ராஜகோபால்.
கூடவே இருப்பிடத்தையும் வழங்கி சரியான நேரத்தில் ஊதிய உயர்வும் தரப்படுகிறது. வெளியூரிலிருந்து தனது உணவகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளித்து ஊருக்கு அனுப்பி விடுவாராம். மேலும் ஊழியர்களின் முதல் இரண்டு குழந்தைகளின் கல்விக்கும் ராஜகோபால் துணை நிற்பாராம்.
ஊழியர்களை சிறப்பாக கவனித்து கொண்டாலே தொழில் உற்பத்தி தானாகவே அதிகரிக்கும் என்பதே ராஜகோபாலின் தாரக மந்திரமாக இருந்துள்ளது.