ஐ-பேக் அலுவலகத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்கள்... தகுதியான புதிய ஆட்களுக்கு பஞ்சம்..?
சென்னை: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஊழியர்கள் பலர் வெளியேறி வருகின்றனர்.
அவர்கள் அங்கிருந்து செல்வதற்கு கடுமையான மன அழுத்தமும், பணிச்சுமையும் தான் காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக தேர்தலுக்கு பணியாற்ற தகுதியான புதிய ஆட்களை தேடித்தேடி அழைத்தும், பணி நிரந்தரமின்மை காரணமாக பலரும் ஐ-பேக் அலுவலகத்தில் இணைய ஆர்வம் காட்டவில்லை.
எல்லா பந்தும் "சிக்ஸர்"தான்.. திகைப்பில் எதிர்ப்புகள்.. சரமாரி வியூகங்களை லாவகமாக சமாளித்து.. செக்!
தேர்தல் வியூகம்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுகவுக்காக தேர்தல் பணியாற்றி வருகிறது பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம். இதற்காக சென்னை அண்ணா நகரில் பிரம்மாண்ட அலுவலகம் அமைக்கப்பட்டு அறிவார்ந்த நபர்கள் பலரை பணிக்கு அமர்த்தினார் பிரசாந்த் கிஷோர். தொடக்கத்தில் விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்ற நிலையில் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பணிகளை முடக்கத் தொடங்கியது.
வேலை வேண்டாம்
இதனிடையே சென்னையில் கொரோனா பரவல் அதிகம் எதிரொலி மற்றும் ஊரடங்கு காரணமாக அண்ணாநகரில் உள்ள ஐ-பேக் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் work from home முறையில் பணியாற்றத் தொடங்கினர். இந்த சூழலில் பணிச்சுமையை கூட்டிக்கொண்டே சென்றதால் பல ஊழியர்களும் ஐ-பேக் அலுவலகத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டனர். அங்கிருந்து வெளியேறும் ஊழியர்கள் சிலரை அதிமுகவுக்கு பணியாற்றும் சுனில் அண்ட் கோ தங்கள் முகாமிற்கு அழைத்துச்செல்கிறது.
திறமையான
அந்த வகையில் ஐ-பேக் அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பு வகித்த கணேஷ்ராம் என்பவர் இப்போது சுனில் டீமில் இணைந்துள்ளார். இதேபோல் டெல்லியில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பெண் செய்தியாளராக இருந்த ஒருவர் ஐ-பேக் சென்னை அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பு வகித்த நிலையில் அவரும் ராஜினாமா செய்துவிட்டார். இப்படி திறமையான, தகுதியான ஆட்கள் வரிசையாக வெளியேறுவது பிரசாந்த் கிஷோருக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.
பணி நிரந்தரமின்மை
இதனிடையே புதிய ஆட்களை தேர்வு செய்யலாம் எனக் கருதினால் கொரோனா பெரிய தடையாக உள்ளது. ஐ-பேக் அலுவலகத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தும் பணி நிரந்தரமின்மை காரணமாக அதை பலரும் நிராகரித்து விடுகின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பு ஐ-பேக் வேறொரு மாநிலத்திற்கு சென்றுவிடும் என்பதால் தகுதியான ஆட்கள் பலரும் அங்கு பணியில் சேர அஞ்சுகின்றனர்.