சென்னையில் ரவுடி என்கவுன்டர்.. போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் சுட்டுக்கொலை!
சென்னை: மாதவரம் பேருந்து நிலையம் அருகே போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற வல்லரசு என்ற ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் வல்லரசு. இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக அவர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் வியாசர்பாடி எம்என் கார்டன் பகுதியில் ரவுடிகள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அட்டகாசம் செய்து வருவதாக வியாசர்பாடி காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலரான பவுன்ராஜ், அதிகாலை 4.15 மணிக்கு சக காவலர்களுடன் சென்று ரவுடிகளை கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
சரிந்து விழுந்த காவலர்
அப்போது கூட்டாளிகளுடன் இருந்த ரவுடி வல்லரசு காவலர் பவுன்ராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பவுன்ராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
காயமடைந்த ரவுடி வல்லரசு
இதையடுத்து ரவுடி வல்லரசு மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ரவுடி வல்லரசு படுகாயமடைந்தார். இதைதொடர்ந்து அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வரும் வழியிலேயே மரணம்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ரவுடி வல்லரசு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.வல்லரசு தாக்கியதில், காயம் அடைந்த காவலர்கள் பவுன்ராஜ், பிரேம்குமார் மற்றும் தீபன் ஆகியோர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரும் பரபரப்பு
சுட்டுக்கொல்லப்பட்ட வல்லரசுவின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த மாதவரம் பேருந்து நிலையம் அருகே நிகழ்ந்த இந்த என்கவுடன்ரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரவுடி ஆனந்தன் என்கவுன்டர்
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற என்பவுன்டரில் ஆனந்தன் என்ற ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டார். ராஜவேலு என்ற போலீசாரை சரமாரியாக வெட்டிய வழக்கில் ஆனந்தன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் அவரை தொடர்ந்து தற்போது சென்னையில் மீண்டும் ஒரு என்கவுன்டர் அரங்கேறியுள்ளது.