சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அன்னிய செலவாணி மோசடி தொடர்பாக சம்மன் அனுப்ப அமலாக்கப்பிரிவுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வருமான வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுக்கும், அன்னிய செலவாணி மோசடி, பண மோசடி போன்ற வழக்குகளில் அமலாக்கத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய ஆட்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உரிமையில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறைக்கு உரிமை உள்ளதை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பலகோடி ரூபாய் அன்னியசெலவாணி மோசடி புகார் தொடர்பாக அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி ஜிஐ டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாகி ராமு அண்ணாமலை ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரது, வழக்கில் "எனது இடத்தில் நடத்தப்பட்ட அமலாக்கப்பிரிவு சோதனையை செல்லாது என அறிவிக்கவேண்டும், விசாரணை என்ற பெயரில் என்னை துன்புறுத்தக்கூடாது, விசாரணையை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தவேண்டும். எனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யவேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கப்பிரிவு சார்பாக வழக்கறிஞர் என் ரமேஷ் ஆஜராகி வாதாடினார். தனது வாதத்தில் அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்ப சட்டப்படி முழு அதிகாரம் உள்ளது என்றும் மனுதாரருக்கு சம்மன் அனுப்பப்பட்டபிறகே சோதனை நடத்தப்பட்டது என்றும் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் சம்மன் அனுப்ப அமலாக்கப்பிரிவு க்கு சட்டப்படி முழு அதிகாரம் உள்ளது. மேலும் இது தொடர்பாக ரிட் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று உத்தரவிட்டார். சோதனை அறிக்கையை மனுதாரருக்கு வழங்கவேண்டும் என்றும் அமலாக்கப்பிரிவு சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்தலாம் என்றும் விசாரணைக்கு மனுதாரர் உரிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.